யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிராவில் நடந்த கொள்ளை சம்பவத்தை தமிழ்நாடு எனத் தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
கோவை சொக்கம்புதூர் நகை பட்டறையில் நடந்த கொள்ளை வேதனையாக உள்ளது சட்டம் கடுமையாக வேண்டும்
விரிவான விளக்கம்
கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள நகை பட்டறையில் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டதாக சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இச்சம்பவம் தொடர்பாக ‘Lokmat Times’ என்ற தளத்தில் செய்தி வெளியாகியிருப்பதைக் காணமுடிந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் லக்ஷ்மிநாராயண் மார்க்கெட் பகுதியில் சஞ்சய், மிருத்யுஞ்சய் என்ற சகோதரர்கள் நகை பட்டறை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி இரவு ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பட்டறையில் இருந்தவர்களை மிரட்டி சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்கத்தைத் திருடியுள்ளனர்.
இச்சம்பவம் பட்டறையிலிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ‘Mumbai Tv’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து ஆயுதங்களைக் காட்டி நகைப் பட்டறையில் கொள்ளையடித்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது என்பதை உறுதி செய்யமுடிகிறது. ஆனால், கோவை எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
மேலும் கோவையில் சமீபத்தில் நகைப்பட்டறையில் இப்படி ஏதேனும் சம்பவம் நடந்ததா என்பது குறித்துத் தேடியதில், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
முடிவு:
கோவையில் துப்பாக்கி காட்டி மிரட்டி நகைப் பட்டறையில் கொள்ளை சம்பவம் நடந்ததாகப் பரவும் சிசிடிவி காட்சி குறித்த தகவல் உண்மை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.