யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படம் 2016ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள சம்மாந்துறையில் பல மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட தை பொங்கல் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
சர்ச் கட்ட தடங்கல் வராமல் இருக்க கணபதி பூஜயாம்… அப்புறம் எதுக்கு ஏசு அப்படீன்னு தேவையில்லாத மூணு ஆணி?

விரிவான விளக்கம்
கன்னியாஸ்திரி உடையிலிருக்கும் பெண் ஒருவர் மாணவர்கள் சுற்றி நிற்க இந்து கடவுளான பிள்ளையார் உருவப்படத்தை வணங்கும் காட்சியை உள்ளடக்கிய புகைப்படத்தை பதிவிட்டு, ’சர்ச் (திருச்சபை) கட்டுவதற்கு முன்பு கிறிஸ்துவர்கள் கணபதி பூஜை செய்கிறார்கள்’ என்று சமூக வலைத்தளத்தில் இந்துத்துவவாதி ஒருவர் பரப்பி வருகிறார்.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ மூலம் தேடியதில், ‘OMLANKA’ என்ற இணையத்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. ’சம்மாந்துறை பொங்கலில் கலந்துகொண்ட பல மதத்தைச் சேர்ந்த தலைவர்கள்’ என்ற தலைப்பில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், பரப்பப்படும் இந்த புகைப்படத்தைக் காணமுடிகிறது.

அந்த செய்தியில், ‘இலங்கையில் உள்ள சம்மாந்துறையில் நடக்கும் தைத் திருநாள் விழாவில் பௌத்த, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டது அந்த பகுதியின் தனித்துவமான அம்சம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, கன்னியாஸ்திரி ஒருவர் பிள்ளாயார் உருவப்படத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் இலங்கையில் உள்ள சம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தை பொங்கல் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.
முடிவு:
2016ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள சம்மாந்துறையில் பல மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட தை பொங்கல் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ‘திருச்சபை கட்ட கணபதி பூஜை செய்யப்படுவதாக’ ஒருவர் தவறாக பரப்பி வருகிறார்.