யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக ஆட்சியில் பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை. புதிய பேருந்து அட்டை வழங்குவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
ஜூன் 4 la இருந்து எனக்கு School reopening.. இவ்ளோ நாள் Bus pass இருந்தா மட்டும் தான் free. Sometimes pass aa வீட்ல விட்டு வந்து.. அவஸ்த படுவேன். இப்போ எங்க அண்ணாவோட இந்த அறிவிப்பு.. என் வயித்துல மோர வார்த்துச்சு. இனி tension இல்லாம.. 8th படிப்பேன்.
விரிவான விளக்கம்
2025-26 கல்வி ஆண்டில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்தவுடன், ஏப்.17 முதல் கோடை விடுமுறைவிடப்பட்டு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் நேற்று (ஜூன் 4) திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் இனி பள்ளி சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் பஸ் பாஸ் இல்லாமல் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
பேருந்தில் கட்டணமில்லா பயணம்
#school… pic.twitter.com/7A8rarIl7G
"பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்"
- அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாடு அரசு மே 29 அன்று பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, “DIPR TN” பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பைக் காணமுடிந்தது.
அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 04.06.2026 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் உததரவிட்டுள்ளார். மேலும் புதிய பேருந்து அட்டை வழங்குவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் கருத்தில் கொண்டு இவ்வாறு கால அவகாசம் தரப்பட்டுள்ளது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், “மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து அட்டை வழங்கும் வரை மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும்” என்று குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
மேலும் இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், இது இதற்கு முந்தைய ஆட்சியிலும் பின்பற்றப்பட்ட நடைமுறை தான் என்பதை, “Tamilwire“ பக்கத்தில் கடந்த 2025, மே 30 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தி மூலம் உறுதிபடுத்த முடிந்தது.

அதில், “போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. பொதுவாக கல்வி ஆண்டு தொடங்கி சில நாட்கள் கழித்துதான் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கும் நடைமுறை தொடங்கும். அதுவரை மாணவர்கள் கட்டண அடிப்படையில் தான் பேருந்துகளில் பள்ளிக்கு செல்வார்கள். இந்தமுறை அந்தக் குறையை போக்கும் வகையில் அரசு மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தாலே மாணவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இல்லையென்றால் மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையுடனே கூட பள்ளிகளுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் அறிவித்துள்ளார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், “தவெக ஆட்சியில் பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை. புதிய பேருந்து அட்டை வழங்குவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இதற்கு முந்தைய ஆட்சி காலத்திலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.