யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 105000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பரவிய செய்தி
செங்கோட்டையன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தால் தான் மிக விரைவில் தவெகவில் இணைக்கப்பட்டார் - Felix

விரிவான விளக்கம்
Red Pix பெலிக்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதிமுகவில் இபிஸ், டிடிவி, ஒபிஸ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்றும், செங்கோட்டையன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
இது குறித்து எங்கள் ஆய்வினை தொடங்கினோம். செங்கோட்டையன் ஊழல் குற்றச்சாட்டு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது Rediff ஊடகத்தில் ”Jaya's minister Sengottaiyan gets 4 years' RI” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 04, 2000ஆம் ஆண்டு செய்தி வெளியாகி இருந்தது. அதில் சென்னை சிறப்பு நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 105000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவா போக்குவரத்துக் கழகத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் வீரப்பன் மற்றும் சப்ளையர் நடராஜன் ஆகியோரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1,00,000 ரூபாய் மற்றும் 92,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அதே Rediff ஊடகத்தில் ஏப்ரல் 26, 2002 அன்று, ”Court acquits former AIADMK minister in corruption case” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ரூ.1.58 கோடி மதிப்புள்ள போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, 2000ஆம் ஆண்டே போக்குவரத்து கழகத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்த வழக்கில் செங்கோட்டையன் குற்றவாளி என தீர்ப்பளித்து, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மறைத்து செங்கோட்டையன் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் என்று பெலிக்ஸ் பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்.