யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த ஐம்பத்துக்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 30 அன்றே பதிவு செய்துள்ளது.
பரவிய செய்தி
செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை - பெலிக்ஸ்

விரிவான விளக்கம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் Inclusive News Tamil ஊடகத்தில் தவெக உறுப்பினரும், ஊடகவியலாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நேர்காணால் ஒன்றை அளித்திருந்தார். அதில் கரூரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
உண்மை என்ன?
ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தெரிவித்த இந்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 30, 2026 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ”கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்கிய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தாக்கிய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
இது குறித்து மேலும் தேடிய போது, One India Tamil ஊடகத்தில், "அண்ணே, உங்களை தெரியும்…கரூரில் கதறிய செய்தியாளர்! திமுக பழனியாண்டிக்கு சிக்கல்? சீறும் கிருஷ்ணசாமி” என்ற தலைப்பில் பிப்ரவரி 02 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் கரூர் குவாரியில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறனர் என்றும், திருச்சி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என பெலிக்ஸ் பொய் செய்தி பரப்பி வருகிறார்.