யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலையுடன் இருப்பவர், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் "ராஜினி" ஆகும். இதை 'திருப்புவனம் அஜித்குமார்' வழக்கோடு தொடர்புடைய "நிகிதா" என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
நிகிதா பாஜக உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று ஆதாரங்களுடன் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன… இனி நடுநிலையாளர்கள் !! அஜீத்குமார் படுகொலை குறித்து பேசுவதை வேகமாக நிறுத்துவார்கள்…

விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்தார். இந்நிலையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா, பாஜகவுடன் தொடர்பில் இருப்பவர் என்றும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருக்கும் புகைப்படம் என்றும் தமிழ் கேள்வி செந்தில் வேல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஜூலை 4ஆம் தேதி பாலிமர் ஊடகத்தில் ”அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா அல்ல... நான் தான்.. வழக்கை திசைத்திருப்ப வேண்டுமென்றே இப்படி பண்றாங்க.. பா.ஜ.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி பரபரப்பு புகார்” என்ற தலைப்பில் வெளியான பேட்டி ஒன்றை பார்க்கமுடிந்தது.
அதில் பேசிய ராஜினி என்ற பெண், ”என் மண், என் மக்கள் நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும், அஜித்குமார் வழக்கை திசைத்திருப்புவதற்காக அண்ணாமலையுடன் நான் இருக்கும் புகைப்படத்தை நிகிதா என்று பரப்புவதாகவும்” குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ராஜினியின் சமூக வலைதளப்பக்கங்களில் இந்த புகைப்படம் இருக்கிறதா என்பது குறித்து தேடினோம். அப்போது Bjp Rajini Bjp Rajini என்ற முகநூல் ஜூன் 4ஆம் தேதி, அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படத்தை ராஜினி பதிவிட்டுருப்பதை பார்க்கமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலையுடன் இருப்பவர், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் "ராஜினி" ஆகும். இதை 'திருப்புவனம் அஜித்குமார்' வழக்கோடு தொடர்புடைய "நிகிதா" என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.