யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மொராதாபாத்தில் இருந்து உத்தரகாண்டில் உள்ள காஷிபூர் வரையிலான 4 வழிச் சாலையை அகலப்படுத்தும் பணியில் இடையூறாக இருந்த 9 கோயில்கள் மற்றும் 1 கல்லறை இடிக்கப்படும் போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
உபியின் மொரதாபாத்தில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பீர் சாஹேப் கல்லறையை நீதிமன்ற உத்தரவின் பேரில் எலும்புக்கூட்டுடன் அகற்றியது உபி அரசு

விரிவான விளக்கம்
உத்திர பிரதேசத்தின் மொரதாபாத்தில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து பீர் சாஹேப்பின் கல்லறை கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உபி அரசு அந்த கல்லறையை இடித்ததாகவும் 28 நொடிகள் கொண்ட ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது INDIA NEWS HD ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் மே 19ஆம் தேதி பரவி வரும் காணொளி குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் இருந்து உத்தர காண்டில் உள்ள காஷிபூர் வரையிலான 4 வழிச் சாலையை அகலப்படுத்தும் பணியில் இடையூறாக இருந்த 9 கோயில்கள் மற்றும் 1 கல்லறை இடிக்கப்பட்டதாகவும், கோயில்களிலிருந்து சிலைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த செய்தி குறித்து keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது மே 18ஆம் தேதி, “9 temples, mazar razed for Moradabad-Kashipur 4-lane highway project” என்ற தலைப்பில் TIMES OF INDIA இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மொராதாபாத் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 9 கோயில்கள், ஒரு கல்லறை மற்றும் ஒரு மசாரை இடித்தது என்றும், இந்த இடிப்பு சம்பவம் உஸ்மான்பூர் கிராமத்தில் போராட்டங்களைத் தூண்டியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் வட்டார அலுவலர் ருத்ர குமார் சிங் கூறுகையில், கட்டுமானங்களை இடிப்பதற்கு முன்பு சில உள்ளூர் வாசிகள் கூடுதல் அவகாசம் கோரியதாகவும், ஆனால் நெடுஞ்சாலைப் பணி ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், இடிப்பு திட்டமிட்டபடி நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அதே போல் ”Bulldozers on temples and tombs in Murshidabad, administration demolished religious places for a big reason” என்ற தலைப்பில் மே 19ஆம் தேதி CAPITAL TV UTTAR PRADESH ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், பரவி வரும் வீடியோ உத்தர பிரதேசத்தில் 4 வழிச் சாலையை அகலப்படுத்தும் பணியில் இடையூறாக இருந்த 9 கோயில்கள் மற்றும் 1 கல்லறை இடிக்கப்படும் போது எடுக்கப்பட்டதாகும். இதை அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பீர் சாஹோப் கல்லறை இடிப்பு என்று தவறாக பரப்புகின்றனர்.