யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025 டிசம்பர் மாதமே தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியாவின் உல்சான் நகரத்திற்குச் சென்று அந்நகரத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளத்தை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதால், அமைச்சர் கீர்த்தனா தென் கொரியா சென்று அந்நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ’ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் இந்த திட்டம் தவெக அரசால் கொண்டுவரப்பட்டதாக’ தவெக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
இப்படி சத்தமே இல்லாம வேலைய மட்டும் செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்!
Well done @Keerthana4VNR ✨ pic.twitter.com/fwl6ZAUeAO
உண்மை என்ன?
தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்தது குறித்த செய்திகளைத் தேடினோம்.

2025 டிசம்பர் மாதம் ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றில், ‘2025 டிசம்பர் 7ஆம் தேதியன்று மதுரையில் நடந்த ‘T.N. Rising Summit’ என்னும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைப்பது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ’WION’ என்ற செய்தித்தளத்தில் 2025 டிசம்பர் 8ஆம் தேதியன்று வெளியாகியுள்ள செய்தியில், ‘ஒன்றிய அரசு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை முன்மொழிந்ததாகவும், அதில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. தென் கொரியாவின் உல்சான் நகரத்தை போலவே தூத்துக்குடியில் வெயில் மற்றும் மழைப்பொழிவு இருப்பதால், தூத்துக்குடி ஏற்ற இடமாக இருக்குமென்று ஹூண்டாய் நிறுவனம் தீர்மானித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்தது 2025 டிசம்பர் மாதம் என்பதும் அப்போது திமுக ஆட்சியில் இருந்தது என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
திமுக ஆட்சியில் 2025 டிசம்பர் மாதமே ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளதை மறைத்து, இந்த திட்டம் தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.
