யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான இந்த டெண்டர் 2024 டிசம்பர் மாதம் திமுக ஆட்சியிலே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 20,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தற்போது தவெக அரசு ரத்து செய்தது.


விரிவான விளக்கம்
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்காக ஸ்மார்ட் மீட்டர்களை (Smart Meters) கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஆதானி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. 20,000 கோடி மதிப்பிலான அந்த டெண்டரை தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
All Opposition Ruled States Must Not Allow Adani Smart Meters For Residential Properties. pic.twitter.com/p9yybT2IfX
உண்மை என்ன?
அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். 2025 ஜனவரி மாதம் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது.

அதில், ‘தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக 2023 ஆகஸ்ட் மாதம் நான்கு தொகுப்பாக டெண்டர்கள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் 82 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான இத்திட்டத்தின் டெண்டரை அதானி குழுமத்தைச் சேர்ந்த ’அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் (AESL)’ ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் 2024 டிசம்பர் மாதம் AESL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘Deccan Herald’ செய்தித்தளத்தில் 2024 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி, ‘AESL நிறுவனம் டெண்டரில் கொடுத்திருந்த விலை அதே நிறுவனம் ஆந்திரா, புதுச்சேரியில் கொடுத்துள்ள விலையை விட அதிகமாக இருக்கிறது என்றும் விலையை குறைக்கச் சொல்லி AESL நிறுவனத்திடம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும்’ தெரிய வருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான டெண்டர் 2024 டிசம்பர் மாதமே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பது தெரியவருகிறது.
முடிவு:
கடந்த திமுக ஆட்சியிலே அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதை மறைத்து, தற்போது தவெக அரசு தான் அதனை ரத்து செய்ததாக தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.