யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 நவம்பர் மாதம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரத்தில் உள்ள சிலம்பாத்தம்மன் கோவில் மண்டபத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இடித்தது. இதில் கோவில் மைய பகுதிக்கு சேதாரம் இல்லாமல் மண்டபம் மட்டுமே இடிக்கப்பட்டது. மேலும், இதற்காக 29 லட்சம் நிவாரணத் தொகையும் வழக்கப்பட்டது.
பரவிய செய்தி
இந்துக்களே...!
இனி திமுக விற்கு ஓட்டுப் போடுவாதில்லை என்று முடிவு செய்யுங்கள்...!
இந்து விரோத தி.மு.க.வை விரட்டியடிப்போம்!!

விரிவான விளக்கம்
திமுக அரசு கோயில் இடித்துவிட்டதாக கூறி 14 விநாடி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சினிமா காட்சிகளை நேரில் பார்ப்பது போல அரங்கேறி உள்ள இந்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த வீடியோவில் இருந்தது.
இந்துக்களே...!
இனி திமுக விற்கு ஓட்டுப் போடுவாதில்லை என்று முடிவு செய்யுங்கள்...!
இந்து விரோத தி.மு.க.வை விரட்டியடிப்போம்!! pic.twitter.com/gF0XVGXuGD
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மற்றும் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அப்போது The Hindu ஊடகத்தில் நவம்பர் 19, 2024 அன்று, “Temple mandapam demolished to make way for NH service lane” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அதில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரத்தில் உள்ள சிலம்பாத்தம்மன் கோவில் மண்டபத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இடித்தது. இதில் கோவில் மைய பகுதிக்கு சேதாரம் இல்லாமல் மண்டபம் மட்டுமே இடிக்கப்பட்டது. மேலும், இதற்காக 29 லட்சம் நிவாரணத் தொகையும் வழக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் ”சோழவரத்தில் கோயில் முகப்பு மண்டபம் இடிக்கும் பணி தொடக்கம்” என்ற தலைப்பில் தினமணி ஊடகத்திலும், நவம்பர் 19, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்காக சிலம்பாத்தம்மன் கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கினர். நீண்ட காலமாக கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க கிராம பொதுமக்களிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் கோயில் மண்டபத்தை இடிப்பதற்கான பணிகள் தொடங்கின என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், கடந்த 2024 நவம்பர் மாதம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பாத்தம்மன் கோவில் மண்டபத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இடித்தது. இதனை திரித்து தமிழ்நாடு அரசு கோவிலை இடித்ததாக தவறாகப் பரப்புகின்றனர்.