யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை 2025 அக்டோபர் மாதம் திமுக ஆட்சியில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
பரவிய செய்தி
நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்த ’ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (Earned Leave Surrender)’ முறையை தவெக அரசு தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளது.

விரிவான விளக்கம்
‘எனது அம்மா அரசாங்க வேலையிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்றார். அவர் பணியிலிருந்த போது சேமித்த ஈட்டிய விடுப்பிற்கு (Earned Leave) கொடுக்கப்படவேண்டிய பணப் பலன் நீண்டகாலமாக கிடைக்காமல் இருந்தது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் (CM Cell) பல முறை முறையிட்டும் திமுக ஆட்சியில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் இதுகுறித்து முறையிட்டோம். அடுத்த 3 வாரங்களில் என் அம்மாக்கு பணப்பலன் கிடைப்பதற்கான அரசாணை வெளியானது’ என்று கூறும் Whatsapp உரையாடல் ஒன்றின் Screenshot தவெக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
I just received this message from my close friend who lives in Europe. Her amma lives alone in Chennai, and her long-standing issue has been resolved in a few weeks. This made my day. This is the change we all asked for. 🙏 Thank you, CM sir @CMOTamilnadu pic.twitter.com/cbKX2hz4l4
உண்மை என்ன?
‘ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (Earned Leave Surrender)’ முறை என்பது அரசு வேலையில் உள்ளவர்கள், குறிப்பிட்ட ஆண்டில் தாங்கள் விடுப்பு எடுக்காமல் சேமித்து வைத்துள்ள விடுப்பு நாட்களை ஒப்படைத்து அதற்கான சம்பளத்தை பணப் பலனாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையாகும்.

இதுகுறித்த செய்திகளைத் தேடியபோது, 2025 மார்ச் மாதம் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘கொரோணா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை தற்காலிமாக நிறுத்தப்பட்டது. அவ்வாறு நிறுத்தப்பட்ட இந்த முறை, மீண்டும் செயல்பாட்டு வரும் என்றும் 2026 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறையில் ஆண்டுக்கு 15 நாட்களுக்கான பணப்பலனை பெறலாம்’ என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’30.06.2025’ தேதியன்று வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அரசாணையில், இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு 2021, 2022 ஆகிய இரண்டு முறை நீடிக்கப்பட்டது என்பதாகும்.
மற்றொன்று, ’2026 ஏப்ரல் முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் முறை அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பயன் பெறலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை 2025 அக்டோபர் மாதம் திமுக ஆட்சியில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது என்பது தெரிகிறது.
முடிவு:
அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை 2025 அக்டோபர் மாதம் திமுக ஆட்சியில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனை மறைத்து, தவெக அரசு தான் தற்போது இதனை மீண்டும் கொண்டு வந்திருப்பதாக தவறாக பரப்பப்படுகிறது.