யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த மே 6ஆம் தேதி ஏமன் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
பரவிய செய்தி
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் NCA தலைமையகத்திற்கு அடுத்துள்ள அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்தது. இந்தத் தாக்குதலால் இஸ்லாமாபாத் மிகவும் அதிர்ச்சியடைந்து, தலையிடக் கோரி அமெரிக்காவிற்கு ஓடினர். பாகிஸ்தானில் மருத்துவ அவசரநிலை, அணு கதிர்வீச்சு பரவி வருகிறது.

விரிவான விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டிடங்களையும், தீப்பிடித்து எரியும் விமானங்களையும் காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்ததாகவும், இதனால் பாகிஸ்தானில் அணு கதிர்வீச்சு பரவி வருவதாகவும் பாஜகவைச் சேர்ந்தரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் NCA தலைமையகத்திற்கு அடுத்துள்ள அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்தது.
இந்தத் தாக்குதலால் இஸ்லாமாபாத் மிகவும் அதிர்ச்சியடைந்து, தலையிடக் கோரி அமெரிக்காவிற்கு ஓடினர்.
பாகிஸ்தானில் மருத்துவ அவசரநிலை, அணு கதிர்வீச்சு பரவி வருகிறது pic.twitter.com/g6QS2b83US
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘PressTV Extra’ என்ற ‘எக்ஸ்’ தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. மே 7ஆம் தேதியன்று பதிவிடப்பட்டிருந்த அந்த பதிவில், ‘சனா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டும் மற்றொரு காணொளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Al Jazeera English’ யூடியூப் தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. இந்த செய்தியிலும் பரப்பப்படும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏமன் தலைநகர் சனா நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், ’BBC’ செய்தித்தளத்திலும் இந்த தாக்குதல் மே 6ஆம் தேதியன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மே 12 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விமானப்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் A.K.பாரதி, 'கிரானா மலையில் உள்ள அணு கட்டமைப்பை நாங்கள் தாக்கவில்லை’ என திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தானில் அணு கதிர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அமெரிக்காவின் அணுசக்தி அவசரகால ஆதரவு விமானம் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பிலும் எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேற்கூறிய விவரங்களிலிருந்து பரப்பப்படும் வீடியோ, ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவை, பாகிஸ்தானில் அணுசக்தி கட்டளை மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.