யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தொகுதி மறுவரையறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, 1962-ல் 41 ஆக இருந்த தொகுதிகள், 1967 பொதுத் தேர்தலில் 39 ஆகக் குறைக்கப்பட்டன. எனவே, தொகுதிகள் குறைக்கப்பட்ட நிகழ்வு 1971-ல் நடைபெறவில்லை. 1967-ஆம் ஆண்டே நடந்து முடிந்துவிட்டது. இந்த அரசாணை வெளியிடப்பட்ட 1965-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் எம்.பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசே ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
1970-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் “Delimitation” செய்யப்பட்டதில், தமிழ்நாட்டின் 41 நாடாளுமன்ற தொகுதிகள் 39 ஆக குறைப்பு. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவில்லை.

விரிவான விளக்கம்
ஒன்றிய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பானவை என்றும், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும் என்றும் ஒன்றிய அரசால் சொல்லப்பட்டது.
ஆனால், "தொகுதி மறு வரையறை , மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் குறுக்கு வழியில் ஒரு மசோதாவை நிறைவேற்ற பார்ப்பதை ஏற்க முடியாது. தொகுதி மறுவரையறை மசோதா அமல்படுத்தினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும். வட மாநிலங்களிலே அதிக பிரதிநிதித்துவம் பெறும்” எனக் கூறி தென் மாநிலங்களை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக நாமக்கல் சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், “1970-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் “Delimitation” செய்யப்பட்டதில், தமிழ்நாட்டின் 41 நாடாளுமன்ற தொகுதிகள் 39 ஆக குறைக்கப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவில்லை” என்று கூறி புகைப்படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
#Tamilnadu lost 2 seats when seats increased from 494 to 520.#Tamilnadu was unfair under Congress rule.#Congress hated Tamilnadu and Tamil pride.
தமிழ்நாடு விரோதி காங்கிரஸ்
தமிழர் விரோதி காங்கிரஸ் pic.twitter.com/VWCHwpfibw
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒன்றிய அரசால் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தொகுதி மறுவரையறை ஆணையம் 1965-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதியே வெளியிட்டுவிட்டது.
இந்த அரசாணை வெளியிடப்பட்ட 1965-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் எம்.பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசே ஆட்சியில் இருந்தது. தி.மு.க. அப்போது பிரதான எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்தது. அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு 1967 மார்ச் மாதத்தில்தான் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, 1962-ல் 41 ஆக இருந்த தொகுதிகள், 1967 பொதுத் தேர்தலில் 39 ஆகக் குறைக்கப்பட்டன.

எனவே, தொகுதிகள் குறைக்கப்பட்ட நிகழ்வு 1971-ல் நடைபெறவில்லை. 1967-ஆம் ஆண்டே நடந்து முடிந்துவிட்டது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், “1971-ல் தமிழ்நாட்டின் 41 நாடாளுமன்ற தொகுதிகள், 39 ஆக குறைக்கப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவில்லை" என்ற வாதம் வரலாற்று ரீதியாக முற்றிலும் தவறானது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.