யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாமக்கல் எம்.பி மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் ஏப்ரல் 10 அன்று அதிகாலை 01.30 மணியளவில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, ஏசி, மின்விசிறி போன்ற பொருட்கள் எரிந்தன. இந்நிலையில் இந்த தீ விபத்தை பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் .
பரவிய செய்தி
நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. வீட்டில் இருந்த பொருட்கள் எரித்து சேதம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அப்படித்தானே விடியா முதல்வரே!
விரிவான விளக்கம்
நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் என்று கூறி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அதிமுகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்புவதையும் காண முடிகிறது.
நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. வீட்டில் இருந்த பொருட்கள் எரித்து சேதம்.
#பாதுகாப்பில்லா_தமிழ்நாடு pic.twitter.com/0DK2Q8wxPn
சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அப்படித்தானே விடியா முதல்வரே! @mkstalin
இதனை ‘சமயம்’ ஊடகத்திலும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டிருந்தனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நாமக்கல் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
அச்செய்தியில், “நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாதேஸ்வரன் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகின்றார். இன்று (10.04.2025) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தியணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் இன்று மதியம் சுமார் 13.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#namakkal pic.twitter.com/t2vD2cVqh1
இதன் மூலம் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, ஏசி, மின்விசிறி போன்ற பொருட்கள் எரிந்தன. இந்நிலையில் இந்த தீ விபத்தை பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.