யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
”9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய இராணுவம்” - News18 தமிழ்நாடு.

ஹிந்துஸ்தான் அடிக்க ஆரம்பித்தால்,... பாகிஸ்தான் பன்றிகள் துண்ட காணோம் துணியை காணோம் என்று ஓடுகிறார்கள்
#ஆப்ரேஷன்_சிந்தூர் #OperationSindoor

விரிவான விளக்கம்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரித்தார். பிரதமர் மோடியும் அடுத்தடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தினார். மேலும், இந்தியாவில் 244 மாவட்டங்களில் போர்க் காலத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றிய போர்க் கால ஒத்திகைகள் (mock drill) நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘Operation Sindoor’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘Operation Sindoor’-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என சில வீடியோகள் ’News18 தமிழ்நாடு’ ஊடகம் உட்பட சிலரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.



உண்மை என்ன?
Claim 1: ”9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய இராணுவம்” என்று ஒரு வீடியோவை செய்தியாக வெளியிட்டிருக்கிறது News18 தமிழ்நாடு. இதனை சில சமூக வலைத்தளப் பயனர்களும் பரப்பிவருகிறார்கள்.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘KABUL NEWS’ என்ற செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதே வீடியோவைக் கொண்ட ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியிடப்பட்ட அந்த பதிவில், ’காஸா மீது இஸ்ரேல் குண்டு போடுவதை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 பேர் கொல்லப்பட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்த வீடியோ பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இன அழிப்பு போரில் காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியத போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
பின்னர் இந்த செய்தியை News18 தமிழ்நாடு ஊடகம் அதன் தளத்திலிருந்து நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Claim 2: குண்டு வெடித்து கட்டிடங்களும் வாகனங்களும் சிதறிக்கிடக்கும் வீடியோவை பதிவிட்டு இது ‘Operation Sindoor’-ன் போது இந்திய இராணும் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ என்று பரப்பப்படுகிறது.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’DMP TV’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ’அமெரிக்காவில் உள்ள ‘பிலடெல்பியா’ என்னும் நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்து’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைக் கொண்டு மேலும் தேடியதில், ’10 PHILADELPHIA’ என்ற செய்தித்தளத்தில் இந்த விமான விபத்து குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘கடந்த 2025 ஜனவரி 31ஆம் தேதியன்று, பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மருத்துவ போக்குவரத்து விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக’ குறிப்பிடுகிறது.

இதிலிருந்து, இது கடந்த ஜனவரி மாதம் பிலடெல்பியா நகரத்தில் நடந்த விமான விபத்தால் ஏற்பட்ட சேதத்தை காட்சிபடுத்தும் வீடியோ இது என்பது உறுதியாகிறது.
முடிவு:
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது, பிலடெல்பியா நகரத்தில் நடந்த விமான விபத்து ஆகியவற்றின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.