யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2023-ல் மிக்ஜாம் புயலின் போது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
4000 கோடி கொ*ளையடித்து பத்தாதுன்னு அடுத்த 5000 கோடிக்கு அடி போடுறான் திருட்டு பய..
பிச்சை என்றவுடன் "ஒன்றிய அரசு" "மத்திய அரசு" ஆகி விட்டது....

விரிவான விளக்கம்
வங்கக் கடலில் நவம்பர் 27 ஆம் தேதி உருவான டிட்வா புயலினால், சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதி அடைத்தனர்.
இந்நிலையில் மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தாக தந்தி டிவி ஊடகத்தில் வெளியான செய்தியின் screenshot ஒன்று வைரலாகி வருகிறது.
கையேந்தும் போது 'ஒன்றிய' மறைந்து 'மத்திய' வந்திரும் pic.twitter.com/tZVBnmU85r
உண்மை என்ன?
பரவி வரும் அந்த screenshot-ஐ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Emirates Tamil News என்ற யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 5, 2023 அன்று, “மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் - முதலமைச்சர்” என்ற தலைப்பில் இதே screenshot, வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

இது குறித்த செய்தியை தேடிப் பார்க்கும் போது, கலைஞர் டிவி நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் “ஒன்றிய அரசிடம் ரூ.5,000 கோடி நிவாரணம் கேட்கப்படும்! - CM MK Stalin பேட்டி!” என்ற தலைப்பில் டிசம்பர் 5, 2023 அன்று முதலமைச்சர் அளித்த முழு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அதில், மிக்ஜாம் புயலால் 47 ஆண்டுகளில் காணாத மழையை கண்டுள்ளோம் எனக் கூறிய முதலமைச்சர், 4,000 கோடி ரூபாய் பணிகள் செய்தும் சென்னை மிதப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், 4,000 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் செய்ததால் தான் சென்னை தப்பித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் வரலாறு காணாத மழையால், மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதே போல் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகப்பக்கத்திலும், ”ரூ.4000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்” என்ற தலைப்பில் இது குறித்து டிசம்பர் 5, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், கடந்த 2023-ல் மிக்ஜாம் புயலின் போது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.