யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது. இதன் முழு வீடியோவில், ரூபாய் நோட்டுக்கட்டுகளில் ICICI என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ICICI-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்ததில், “இந்த ரூபாய் நோட்டுக்கட்டுகள் ICICI வங்கியால் வழங்கப்படவில்லை" என்று உறுதி செய்துள்ளதைக் காண முடிகிறது.
பரவிய செய்தி
மக்களே உஷார். வங்கியிலேயே பணக்கட்டுகளுக்கு மாற்றாக வெற்றுத்தாள் கட்டுகள். வங்கியிலிருந்து பணம் வாங்கினாலும் சோதித்து பார்த்து வாங்கிச்செல்லுங்கள்.
விரிவான விளக்கம்
“வங்கியில் இருந்து பெறப்பட்ட பணக்கட்டுகளில் வெற்றுத்தாள்கள் தான் உள்ளன, மக்களே உஷார்” என்று குறிப்பிட்டு 1 நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பணக்கட்டுகளை ஒன்றொன்றாக பிரிக்கும் போது, உள்ளே வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டும் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
YouTube Link:
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதன் முழு வீடியோ கிடைத்தது. இந்த வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது. மேலும் முழு வீடியோவில் ரூபாய் நோட்டுக்கட்டுகளின் பின்புறம் ICICI என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
क्या यह सच है @ICICIBank @ICICIBank_Care @RBI pic.twitter.com/qL0RhRlS7t
எனவே ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இது குறித்து தேடியதில், “இந்த ரூபாய் நோட்டுக்கட்டுகள் ICICI வங்கியால் வழங்கப்படவில்லை. எங்கள் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி இவ்வாறு பரப்புகின்றனர். இது குறித்து புகாரளித்தோம்” என்று குறிப்பிட்டு கடந்த 2024-லேயே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
மேலும் அப்பதிவுகளில் “வீடியோவில் காட்டப்பட்டுள்ள பணக்கட்டுகள் ICICI வங்கியால் வழங்கப்படவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்கள் கரன்சி பெட்டியால் வழங்கப்பட்ட பணக்கட்டுகள் ஒரு தனித்துவமான நிறத்தால் ஆன கவர்களைக் கொண்டு சுற்றப்பட்டிருக்கும், வீடியோவில் காணப்படுவது போல் இருக்காது. யாரோ ஒருவரால் எங்கள் லோகோ மற்றும் பிராண்ட் பெயர் பயன்படுத்தப்பட்டு இந்த வீடியோ தவறாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு போலி ரூபாய் நோட்டுக்கட்டுகள் வங்கிகளில் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து ஏதேனும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ததில், எதிலும் இது குறித்து செய்தி வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், போலி ரூபாய் நோட்டுக்கட்டுகள் வங்கிகளில் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.