யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் “பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக” என்றே கூறுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அவர்கள் “பாகிஸ்தான் வாழ்க” என்று கூறுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பாஜகவினர் உட்பட பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
கடைசி துலுக்கன் கூட இல்லாமல் இருந்தால்தான் இந்தியாவில் நிம்மதியாக இந்துக்கள் வாழமுடியும். பாகிஸ்தான் வாழ்கனு கத்தும் இவர்கள் அங்கேயே போய் வாழவேண்டியதுதானே..
விரிவான விளக்கம்
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தற்போது வரை போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூட்டமாக நிற்கும் சில இஸ்லாமியர்கள் “பாகிஸ்தான் வாழ்க” என்று கூறுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை வலதுசாரிகள் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், “கடைசி துலுக்கன் கூட இல்லாமல் இருந்தால்தான் இந்தியாவில் நிம்மதியாக இந்துக்கள் வாழமுடியும். பாகிஸ்தான் வாழ்க என்று கத்தும் இவர்கள் அங்கேயே போய் வாழவேண்டியதுதானே” என்று தங்களது இஸ்லாமிய வெறுப்புணர்வை காட்டியிருப்பதையும் காண முடிகிறது.
— Mahesh Chennai (@chennai_ma84168) April 24, 2025
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “socialnewsxyz” என்ற இணையதள பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
அதில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தன. அச்செய்தியில் “அகில இந்திய சன்னி ஜமியத்துல் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பஹிம்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஏப்ரல் 23 அன்று மும்பை கிராண்ட் சாலையில் உள்ள பிலால் மசூதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே பரவி வரும் இந்த வீடியோ குறித்து மேலும் தேடினோம். “ANI News” ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு நேற்று (ஏப்ரல் 23) செய்தி வெளியிடப்பட்டிந்தது.
அவ்வீடியோவில், பஹிம்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சன்னி ஜமியத்துல் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள், “பாகிஸ்தான் முர்தாபாத், Terrorist முர்தாபாத்“ என்று கூறுவதை தெளிவாகக் காண முடிகிறது.
அதாவது “பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக” என்றே கூறுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அவர்கள் “பாகிஸ்தான் வாழ்க” என்று கூறுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தான் வாழ்க என்று கூறும் இஸ்லாமியர்கள் என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. வீடியோவில் அவர்கள், “பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக” என்றே கூறுகின்றனர்.