யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். இதனை மறைத்து தவறான கதையாடலை பரப்பி வருகிறார்கள்.
பரவிய செய்தி
"வடமாநிலத்தவர் மீது திமுக பரப்பிய வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக வேலைக்காக தமிழ்நாடு வந்த பீகார் இளைஞர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்" - தமிழ்நாடு பாஜகபினர்.


விரிவான விளக்கம்
சென்னையில் வட மாநில இளைஞர் ஒருவரும் அவரது மனைவி, குழந்தை ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் பொது இடங்களில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த சங்கி பிரின்ஸ், S.G. சூர்யா போன்றவர்கள், ‘தமிழ்நாட்டில் திமுகவினர் வட மாநிலத்தவர் மீது வெறுப்பை பரப்புவதாகவும், அதனால் தான் இங்கிருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை செய்ய வந்த வட மாநிலத்தவர்களை கொலை செய்யும் அளவிற்கு செல்வதாகவும்’ சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.
They came trusting Tamil Nadu for a livelihood, but the DMK's crumbled Law & Order has brutally killed them!
The body of a 24-year-old Bihar youth was found stuffed in a sack in Adyar. But the horror doesn't end there. Reports indicate his wife was subjected to sexual harassment… pic.twitter.com/5NfFc1RoRv
In Chennai, a Bihari named Gourav was attacked, killed, and thrown in a garbage bag. The arrested confessed they also killed his wife and 7-year-old child.
TN, the land of opportunity has become an unsafe place for North Indians under the "North Indian hater" DMK govt rule💔 pic.twitter.com/BWkthv0bQS
உண்மை என்ன?
சென்னையில் வட மாநில இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். ’தந்தி டிவி’ செய்தித் தொலைக்காட்சி இந்த சம்பவம் குறித்த விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பது தெரிய வந்திருக்கிறது. அவரது உடலை இரு சக்கர வாகனத்தில் தூக்கி வந்து போடும் CCTV காட்சியை கொண்டு இரண்டு நபர்கள் கைது செய்திருக்கிறது காவல்துறை. அவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த இரண்டு நபர்களும் வடமாநில இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவ் குமார் தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியும் இரண்டு வயது குழந்தையும் இவருடன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கௌரவ் குமாரை கொலை செய்த வட மாநில நபர்கள் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் கொலை செய்து அவர்களின் மூவரின் உடல்களையும் வெவ்வேறு பகுதிகளில் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக இதுவரை மூன்று நபர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். மேலும் 9 வட மாநில நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
எதற்காக கொலை நடந்தது என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்ததில், தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்பத்துடன் தங்கி கௌரவ் குமார் செக்யூரிட்டி வேலை செய்து வந்த போது, அந்த கல்லூரியில் கட்டிட வேலைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளர்களும் அங்கே தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கட்டிட வேலை செய்ய வந்தவர்கள் தொடர்ச்சியாக கௌரவ் குமார் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று தனது மனைவியிடம் கட்டிட வேலைக்கு வந்தவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதைக் கண்டு கௌரவ் குமார் அவர்களை கண்டித்திருக்கிறார். அதில் ஏற்பட்ட சச்சரவில் தான் கௌரவ் குமார் கொலை செய்ததாகவும், அதன் பின் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், பின்னர் அந்த இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

அதேபோல், ’News 7 தமிழ்’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் 5 பேரை கைது செய்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் வட மாநிலத்தவர்கள் என்றும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரக்களிலிருந்து, கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை அறிய முடிகிறது. மேலும், இந்த கொலைகள் தனிப்பட்ட சர்ச்சை விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என்ற தகவலை இருட்டடிப்பு செய்து சங்கி பிரின்ஸ், S.G.சூர்யா போன்ற பாஜகவினர் தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை கொலை செய்வதாக பொய்யான கதையாடலை (Narrative) தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவினர் பரப்பி வருகிறார்கள்.