யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் ‘தமிழ் ஜனம்’ ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் அடுக்கடுக்கான பொய்களையும் தவறான தகவல்களையும் பேசியுள்ளார்.
பரவிய செய்தி
”தமிழ்நாட்டிலுள்ள மொழிச்சிறுபான்மையினர் இங்கிருக்கும் பள்ளிகளில் தங்களது தாய் மொழியை கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் ஒரு இருக்கை கூட இல்லை” - ‘தமிழ் ஜனம்’ நேர்காணில் ஆளுநர் ரவி பேச்சு.
விரிவான விளக்கம்
’தமிழ் ஜனம்’ செய்தி ஊடகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி கடந்த நவம்பர் 24ஆம் தேதி அவ்வூடகத்தின் யூட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டில் 35% மொழிச் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தாய் மொழியை இங்கிருக்கும் பள்ளிகளில் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. 2022ல் அரசு நடத்தும் பள்ளிகளில் அவர்களது மொழி கற்றுக்கொடுப்பது மறுக்கப்படுவதை எதிர்த்து மொழிச் சிறுபான்மையினர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். உச்ச நீதிமன்றம் 2023 செப்டம்பரில் மொழிச் சிறுபான்மையினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது” என்று பேசினார்.
மேலும், ”தமிழ்நாட்டில் 20 மாநில பல்கலைக்கழங்கள் உள்ளன. ஆனால் அந்த பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் ஒரு இருக்கை கூட இல்லை. அதை அமைப்பதற்காக நான் நான்கு ஆண்டுகளாக போராடிவருகிறேன்” என்றும் கூறுயுள்ளார்.
உண்மை என்ன?
முதலில் தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மையினர் குறித்து இணையத்தில் தேடினோம்.
இந்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ‘LINGUISTIC SURVEY OF INDIA’ என்ற அதிகாரப்பூர்வ ஆவணத்தின் படி, தமிழ்நாட்டில் தமிழ் தவிர்த்து பிற மொழிகள் பேசக்கூடிய மொழிச் சிறுபான்மையினர் 11.63% தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 35% மொழிச் சிறுபான்மையினர் இருப்பதாக ஆளுநர் ரவி பொய்யான தகவலை கூறுகிறார்.

அடுத்ததாக, தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பள்ளிகளில் அவர்களது தாய் மொழி பயில்வது குறித்து தேடினோம். கலைஞர் கருணாநிதி முதல்வாரக இருந்த போது கொண்டுவரப்பட்ட ’தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006’ சட்டத்தின் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்கவேண்டும். இது படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும். 2006-07 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கு மட்டும் அமல்படுத்தப்படும், அடுத்த கல்வியாண்டு 2007-08ல் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படும். இப்படியே ஒவ்வொரு ஆண்டும் விரிவுபடுத்தப்பட்டு 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்படும்.

இச்சட்டத்தின் படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருப்பதால் இவை இரண்டில் ஒன்றை தாய் மொழியாக கொள்ளாத குழந்தைகள் தங்களது தாய் மொழியை விருப்பப் பாடமாக படிக்கலாம் என்ற வசதியும் உள்ளது.
இதனை மறைத்து, தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் இங்கிருக்கும் பள்ளிகளில் தக்களது தாய்மொழியை கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்று முற்றிலும் பொய்யான ஒரு தகவலை ஆளுநர் பேசுகிறார்.

இதேபோல் மேற்கூறிய ’தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006’ சட்டத்தின் படி, 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத மொழி சிறுபான்மையின மாணவர்கள் சார்பில் தங்களது தாய் மொழியில் தேர்வெழுத அனுமதிக்கும்படி பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பித்து.
அதேபோல் 2020 முதல் 2022 கல்வியாண்டு வரையிலும் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழித் தாள் எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டுமென்று என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு 2023 ஆண்டுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறு மொழிச் சிறுபான்மையினர் தங்களது தமிழ் மொழித் தேர்வு எழுதுவது குறித்த விவரங்களை நமது ‘You Turn’ பக்கத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
இதனை திரித்து, தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மையினர் தங்களது தாய் மொழியை கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் எதிர்த்து உச்சநீதிமன்ற சென்றார்கள் என்று தவறான தகவலை ஆளுநர் ரவி பரப்பி வருகிறார்.
அடுத்ததாக ’தமிழ்நாட்டில் உள்ள 20 பல்கலைகழகங்களில், ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியார் பெயரில் இருக்கை (Bharathiyar Chairs) இல்லை’ என்று ஆளுநர் சொன்னது குறித்து தேடினோம்.
முதலில் தமிழ்நாட்டில் 20 மாநில பல்கலைகழகங்கள் உள்ளது என்று ஆளுநர் கூறுவது தவறான தகவலாகும். ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தகவலின் படி, தமிழ்நாட்டில் தற்போது 23 மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களும் (State Public Universities) ஒரு மாநில திறந்தப் பல்கலைக்கழகமும் (State Open University) இயங்கி வருவது தெரியவருகிறது.

மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் இருக்கை உள்ளது. இதே போன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று துணைவேந்தர் கா. பிச்சுமணி கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு:
இவ்வாறு சமீபத்தில் ‘தமிழ் ஜனம்’ ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் அடுக்கடுக்கான பொய்களையும் தவறான தகவல்களையும் பேசியுள்ளார்.