யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாகக் கூறி பரவும் புகைப்படம் தவறானது. ஏசி, நான்-ஏசி அல்லது முகவர் மூலம் பதிவுசெய்யப்படும் தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ஐஆர்சிடிசி உறுதிப்படுத்தியுள்ளது.
பரவிய செய்தி
ரயில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு. வரும் 15 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. கவனத்தில் கொள்க..
விரிவான விளக்கம்
ரயில்களில் பயணம் மேற்கொள்ள பயன்படும் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையானது, ஏ.சி. பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பயணம் செய்வதற்கு காலை 11 மணிக்கும் தொடங்கும். இதில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் என இரண்டு வசதி உள்ளது.
இந்நிலையில், தட்கல் மற்றும் பிரீமியர் தட்கல் முன்பதிவு முறைகளில் ஏப்ரல் 15 முதல் வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. இதனை வலதுசாரி ஆதரவாளர் சரவண பிரசாத் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
*ரயில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு* 🚨 New Tatkal Train Booking Timings from April 15. pic.twitter.com/JxkCQRZr4a
வரும் 15 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. கவனத்தில் கொள்க. pic.twitter.com/sMlvOa7R3f
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான செய்தி அல்ல என்பதை அறிய முடிந்தது.
ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம். தேடியதில், ஏப்ரல் 11 அன்று “தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பரவி வருகின்றன. ஏசி அல்லது ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் தற்போது அத்தகைய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முகவர்களுக்கும் அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை “ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
Some posts are circulating on Social Media channels mentioning about different timings for Tatkal and Premium Tatkal tickets.
No such change in timings is currently proposed in the Tatkal or Premium Tatkal booking timings for AC or Non-AC classes.
The permitted booking… pic.twitter.com/bTsgpMVFEZ
தட்கல் முன்பதிவு அட்டவணை செயல்படும் விதம் மற்றும் வழிமுறைகள்:
- தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை ஏசி வகுப்புகளுக்கு (2A/3A/CC/EC/3E), பயணத்தின் முந்தைய நாள் காலை 10:00 மணிக்கு திறக்கும்.
- இதே போன்று ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு (SL/FC/2S), பயணத்தின் முந்தைய நாள் காலை 11:00 மணிக்கு திறக்கும்.
- முதல் ஏசி (1A) தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும்.
- தட்கல் டிக்கெட்டுகளில் ஒரு PNR-க்கு அதிகபட்சம் நான்கு பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.
- தட்கல் ஒதுக்கீட்டில் மூத்த குடிமக்களுக்கு சலுகை அனுமதிக்கப்படாது.
இதன் மூலம், ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாகக் கூறி பரவும் புகைப்படம் தவறானது. ஏசி, நான்-ஏசி அல்லது முகவர் மூலம் பதிவுசெய்யப்படும் தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் நேரங்களில் எந்த மாற்றத்தையும் ஐஆர்சிடிசி செய்யவில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாக பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.