யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் இந்த நியூஸ் கார்டு போலியானது. இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று ‘நியூஸ் தமிழ்’ ஊடகத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
பரவிய செய்தி
பல தொகுதிகளில் அதிமுகவை deposit இழக்கச் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார் பழனிச்சாமி.

விரிவான விளக்கம்
"கோயில் இல்லா ஊரில்.. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள்தான் கட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளை அல்ல. எடப்பாடி பழனிசாமி வெளிப்படையான பேச்ச" என்று News Tamil 24x7 ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

உண்மை என்ன?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை, News Tamil 24×7 ஊடகம் வெளியிட்டதா, என்பது குறித்து ஆய்வு செய்தோம். முதலில், அவர்களது சமூக வலைதள பக்கங்களுக்குச் சென்று பார்த்தோம். இதுபோன்ற எந்த நியூஸ் கார்டும் அவர்கள் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து News Tamil 24×7 ஊடகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது போன்ற இந்த நியூஸ் கார்டும் தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர்.
எனவே இது போலியான நியூஸ் கார்ட் என்பதை உறுதி செய்யமுடிந்தது.
தற்போது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அப்போது இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் கூறியுள்ளாரா என்பது குறித்து தேடி பார்த்தோம். NewsJ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில்,"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு உரை" என்ற தலைப்பில் ஜூலை 8ஆம் தேதி அவர் கோவையில் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர். அதில் சரியாக 22.16வது நிமிடத்தில் "அரசாங்க பணத்தை எடுத்து, கல்வி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடாமல், அறநிலையத்துறைக்கு பொதுமக்கள் தரும் நிதியை எடுத்து, திமுக அரசு செலவிடுகிறது" என்று பேசியிருந்தார்.
முடிவு:
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியானது என்பது உறுதியானது. எடப்பாடி பழனிசாமியும் இது போன்ற எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை.