யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது.
பரவிய செய்தி
அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விரிவான விளக்கம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நிலவியது.
பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். தற்போது சட்டசபையில் 144 வாக்குகளைப் பெற்று தனது பெரும்பான்மையையும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில், "அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி ‘சன் நியூஸ்’ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ‘சன் நியூஸ்’ ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் 'சன் நியூஸ்' இது குறித்து வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ்கார்டில், “முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா, பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
#BREAKING | “தோழமைத் தலைவர்களுக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்!”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்#SunNews | #MKStalin | #DMK pic.twitter.com/b4sSafTkWf
இந்நிலையில் உண்மையான நியூஸ்கார்டை எடிட் செய்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.