யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அன்னாச்சி பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறு இருந்தாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.
பரவிய செய்தி
புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது!
அன்னாசிப்பழத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அது புற்றுநோயிலிருந்து காப்பாற்றும். சூடான அன்னாசிப்பழம் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்களை வெளியிடுகிறது; இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றமாகும்.

WhatsApp Forward
விரிவான விளக்கம்
”அன்னாச்சி பழத்தை துண்டுகளாக வெட்டி வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும். சூடான வெந்நீரில் கலந்த அன்னாச்சி பழம் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வெளியிடுகிறது. அது அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ICBS பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். கில்பர்ட் க்வோக் என்பவர் கூட இதனை வலியுறுத்துகிறார்” சமூக வலைத்தளமான WhatsApp-ல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். மருந்துகளில் பொதுவாக இரண்டு வகைகள் உண்டு. நோய் தடுப்பு மருந்து (Preventive Medicine), நோயை குணப்படுத்தும் மருந்து (Curative Medicine). மேற்கூறிய வாட்ஸாப் செய்தியில், அது புற்றுநோயை தடுக்குமா அல்லது குணப்படுத்துமா என்பதை தெளிவாக சொல்லப்படவில்லை என்பதை குறிப்பிடவேண்டும்.

பரப்பப்படும் கூற்று குறித்து இணையத்தில் தேடினோம். ‘Medical Dialogues’ என்ற தளத்தில், ’அன்னாச்சி பழம் மார்பக புற்றுநோயை குறைக்குமா?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையைக் காணமுடிந்தது.
அதில், ’அண்ணாச்சி பழத்தில் பிரோமேலைன் (Bromelain) என்ற மூலக்கூறு இருப்பதாகவும், அதற்கு புற்றுநோய் எதிர்ப்பு (Anti Tumour) பண்பு உள்ளது. எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில், எலியின் மார்பாக புற்று செல்கள் வளர்வதை பிரோமேலைன் தடுத்துள்ளது. ஆனால், பிரோமேலைன் மூலக்கூறின் புற்றுநோய் எதிர்ப்பு பண்பு ஆய்வகங்களில் (In Vitro) சோதிக்கப்பட்டு நிரூபிக்கபட்டிருந்தாலும், உயிரணு அளவில் (In vivo) அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சோதிக்கும் வகையில் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, ‘International Centre for Investigative Reporting’ என்ற தளத்தில் 2022ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள கட்டுரையில், டாக்டர். எசெல் அகாபுவே என்ற மருத்துவ நிபுணர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளதை காணமுடிகிறது. அவர் கூறுகையில், ‘புற்றுநோய்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. அன்னாச்சி பழம் எந்த வகையான புற்றுநோயை குணப்படுத்தும்? மேலும் எந்த கட்டத்தில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும்? இரண்டாம் கட்டம் அல்லது மூன்றாம் கட்டம்? இந்த கூற்றின் படி அன்னாச்சி பழம் புற்றை குணப்படுத்தும் என்று வைத்துக்கொண்டாலும், ஒருவரை குணப்படுத்தியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு லட்சம் மக்களில் குறைந்தபட்சம் 2 அல்லது 4 ஆண்டுகள் இதனை சோதனை செய்து விளைவுகளை ஆய்வு செய்த பின்னர் தான் இதனை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும்’ என்கிறார்.

’National Library of Medicine’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், பிரோமேலைன் (Bromelain) மூலக்கூறு புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கிறது. ஆனால் இதன் தாக்கம் உடலளவில் (in vivo) எப்படியிருக்கும் என்பதைப் பற்றி போதுமான ஆய்வுகள் இல்லை. விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளே மிகவும் சொற்பமானதாகவே இருக்கிறது. இந்நிலை பிரோமேலைன் மனித உடலில் எப்படி செயல்படும் என்பதற்கு எவ்வித ஆய்வுகளும் இல்லை. பிரோமேலைன் மூலக்கூறை தனியாகவும், அதனுடன் பிற மூலக்கூறுகளையும் செலுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி பிரோமேலைன் மூலக்கூறின் செயல்பாடு அதனை nano particles என்ற நுண்துகளுடன் செலுத்தும் போதுதான் நன்றாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அன்னாச்சி பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறு இருந்தாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமுல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
எவ்வித சான்றாதாரங்களும் இல்லாமல், அன்னாச்சி பழத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள்.