யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாடு முழுவதும் ஏப்ரல் 14 அன்று 135வது அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த திமுக எம்எல்ஏ. திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியின் கண்களுக்கு அம்பேத்கர் புகைப்படம் மட்டும் தெரியவில்லை. இவங்க திருந்தவே மாட்டாங்க, இவங்களுக்கு வாக்களிக்கும் மக்களாகிய நாம் தான் சிந்திக்கணும், திருந்தணும்.
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல்14-ம் தேதி, "சமத்துவ நாளாக" கொண்டாடப்படும் என்று சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்.
அதன்படி ஏப்ரல் 14 அன்று 135வது அம்பேத்கர் ஜெயந்தி சமத்துவ நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, வரிசையாக பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநதி ஆகியோரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதையும், அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தாதையும் காண முடிந்தது.
பாபாசாகேப் Dr. அம்பேத்கர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தாமல் MLA @idream_murthy அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தான் @arivalayam மற்றும் @mkstalin, Dr. அம்பேத்கரை பார்கும் விதமா, அவரை அவமதித்த @idream_murthy மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
#திராவிட_மாடல் pic.twitter.com/H5XcJC4RAk
திமுகவின் நவீன தீண்டாமை
#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/SWfmQxKUMd
அம்பேத்கர் பெயரை சொன்னால் வாயில அம்மை வந்திருமா ? ராயபுரம் MLA - வுக்கு
இவர் தலைவர் செருப்ப போட்டுக்கொண்டு மாலை போட்டார்,
தலைவன் அப்படி என்றால் தொண்டன் இப்படி இருப்பான் என்பது திருட்டு திராவிட கழகத்திற்கு முதன்மையானது.....
உண்மை என்ன?
ஆய்வு செய்ததில், சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முன்பு மலர்கள் தூவப் பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
எனவே பரவி வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டிருக்கலாம என்ற சந்தேகம் எழவே அதன் முழு வீடியோவை ஆய்வு செய்தோம்.
அதில், திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்று கூறி முதலில் அம்பேத்கரின் படத்திற்கு தான் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் வரிசையாக பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநதி ஆகியோரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதை முழு வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
இந்நிலையில் அவர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதை மட்டும் நீக்கி விட்டு பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல் அவமதிப்பு செய்ததாகக் கூறிப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.