யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதன் முதலில் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த அக்கட்சியினரை சுப்ரியா வரவேற்ற போது எடுக்கப்பட்ட படத்தில் ஆ.ராசாவின் புகைப்படம் இருப்பது போன்று எடிட் செய்து தவறாக சித்தரித்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
ஆமா இந்த போஸ்ட் சுத்திட்டு இருக்கே அது யாரு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க
#திமுகவின்_சமூகநீதி_வேடம் pic.twitter.com/pgjHUjhlF7
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தில் ஆ.ராசாவின் தலை மட்டும் தனியாக ஒட்ட வைத்தது போன்று உள்ளது. எனவே இப்புகைப்படம் குறித்து தேடினோம்.
பரவக் கூடிய புகைப்படத்துடன் ஒத்து போகக்கூடிய வேறொரு படத்துடன் ’Impact news’ என்ற தளத்தில் 2019, நவம்பர் 28ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஆ.ராசாவிற்கு பதிலாக சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே தான் உள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சி முதன் முதலில் சட்டசபை கூட்டத்திற்கு சென்ற போது NCP (SP) கட்சியைச் சேர்ந்த (Nationalist Congress Party – Sharadchandra Pawar) நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே அவர்களை வரவேற்றார்.
அப்படி வரவேற்ற போது ஆதித்யா தாக்கரேவை ஆரத்தழுவி சுப்ரியா வரவேற்றுள்ளார். சிவசேனா கட்சியினரை சுப்ரியா வரவேற்ற வீடியோவுடன் 2019ம் ஆண்டு ‘India Today’ போன்ற ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியுள்ளன. மேலும் இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வேறு படங்களுடன் ‘Aajtak’ ஊடகத்திலும் செய்தி வெளியாகியுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட படத்தில் ஆ.ராசா-வின் முகம் இருப்பது போன்று எடிட் செய்து தவறாக சித்தரிப்புடன் சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் பரப்புகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு ஒன்று சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் அவதூறாகவும் அருவருக்க தக்க வகையிலும் பேசி வருகிறார். இந்நிலையில்தான் அக்கட்சி ஆதரவாளர்கள் இத்தகைய பொய் செய்திகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
பரவக் கூடிய புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அதில் இருப்பவர்கள் NCP (SP) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே ஆவர். 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதன் முதலில் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த அக்கட்சியினரை சுப்ரியா வரவேற்ற போது எடுக்கப்பட்ட படத்தில் ஆ.ராசாவின் புகைப்படம் இருப்பது போன்று எடிட் செய்து தவறாக சித்தரித்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.
