யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கலைஞர் - விஜயகாந்த் நட்பு குறித்தே பிரேமலதா அந்த மேடையில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை போலியாக Edit செய்து தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
OMG
கருணாநிதி முதல்வராக இருந்த போது சர்க்கரை பேர ஊழல் நடந்தது.
கூட்டணியில் இருந்துகொண்டே உண்மையை சொன்னார் @PremallathaDmdk
விரிவான விளக்கம்
2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ’திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிகமாக புழங்குகிறது. மேலும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. ஆனால் இது தவிர இந்த ஆட்சியின் மீது வேறு எதாவது குறை சொல்லமுடியுமா?’ என்று பேசினார். கூட்டணியில் இருந்து கொண்டே பிரச்சாரத்தில் திமுக பற்றி பிரேமலதா இவ்வாறு பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் மேடை ஒன்றில் பிரேமலதா, ‘கருணாநிதி காலத்தில் இருந்தே விஞ்ஞான ஊழல் செய்வது தான் திமுகவின் கொள்கையாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சக்கரை பேர ஊழல் நடந்தது. இந்த ஊழல் குறித்து விராசணை அதிகாரிகள் கேட்டபோது, சக்கரையை எரும்பு தின்றுவிட்டது சாக்கு பைகளை கரையான் தின்றுவிட்டது என்று கருணாநிதி பதில் சொன்னார்’ என்று பிரேமலதா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தவெக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
OMG 😂😱
கருணாநிதி முதல்வராக இருந்த போது சர்க்கரை பேர ஊழல் நடந்து
கூட்டணியில் இருந்துகொண்டே உண்மையை சொன்னார் @PremallathaDmdk 😂🔥
pic.twitter.com/AAN6KPQ0ZQ
உண்மை என்ன?
இந்த வீடியோவைக் காணும் போதே பிரேமலதா வாய் அசைவுகளுக்கும் ஒலி அமைப்பிற்கும் ஒத்திசைவு (Synchronization) இல்லாமல் இருப்பதைக் காணமுடிகிறது. இதனால் அந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
'கலைஞர்-கேப்டன்' - 50 ஆண்டுகள் பழமையான நட்பு’ என்ற தலைப்பில் ’கலைஞர் TV News’ யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த வீடியோவைக் காணமுடிந்தது. ‘ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு வரப்போகும் நாளைய தலைமுறையை சிந்திச்சு பாருன்னு அன்னைக்கே அண்ணன் ஸ்டாலின் கேப்டனுக்காக பாடி இருந்தார். இன்றைய தலைமுறை விஜய பிரபாகரனுக்காக அதை அண்ணன் அந்த ஸ்டேஜ்ல சொல்லும் பொழுது அனைவரும் அதை ரொம்ப ரசிச்சாங்க. அதேபோல ஐயா கலைஞர் அவர்களுக்கும் கேப்டன் அவர்களுக்குமான நட்பு 50 ஆண்டு கால நட்பு’ என்று தான் பேசியுள்ளார்.
கலைஞர் - விஜயகாந்த் நட்பு குறித்தே பிரேமலதா அந்த மேடையில் பேசியிருக்கிறார், கருணாநிதி முதல்வராக இருந்தபோது சக்கரை பேர ஊழல் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும், சர்க்காரிய கமிஷன் விசாரணையின் போது ‘சக்கரையை எறும்பு தின்றுவிட்டது, சாக்கு பைகளை கரையான் தின்றுவிட்டது’ என்று சொல்லப்படும் இந்த கதை எவ்வித ஆதாரமுமற்ற பொய் என்பது குறித்து நமது ‘You Turn’ பக்கத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
பிரேமலதா மேடையில் பேசிய வீடியோவை போலியாக Edit செய்து, கருணாநிதியை ஊழல்வாதி என்று பிரேமலதா சொன்னதாக தவறாக பரப்புகிறார்கள்