யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது அரசுத் திட்டம் கிடையாது. திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான திட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசுத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததாக வீடியோ ஒன்று அதிமுக-வினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்குகிறார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், இது தொடர்பாக வெளியான செய்திகளைக் காண முடிந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் மார்ச் மாதம் 1ம் தேதி வர இருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ’அமுதக் கரங்கள்’ எனப் பெயர் வைக்கப்பட்ட அத்திட்டத்தைக் கடந்த 20ம் தேதி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்தார்.

இந்த அன்னதானம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365 நாட்களுக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி எதிலும் அரசுத் திட்டம் என்று கூறப்படவில்லை. திமுக-வின் சார்பில் செய்யப்படும் நலத்திட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அரசுத் திட்டம் கிடையாது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு:
அரசுத் திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது அரசுத் திட்டம் கிடையாது. திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான திட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
