யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் போஸ்டர் குறித்து, செப்டம்பர் 19ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் செப்டம்பர் 27 அன்று நடந்தது. எனவே கரூர் சம்பவத்தோட இந்த போஸ்டரை தொடர்புபடுத்தி தவறாக பரப்பு வருகின்றனர்.
பரவிய செய்தி
மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? இப்படி போஸ்டர் அடித்து கொண்டாடுவது மனிதனாக இருப்பதற்கே அவமானம்!

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் மரணங்கள் பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமாக கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் நெரிசலில் 11 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ”இதுக்கே பயந்தா எப்டி? இனிதான் ஆரம்பம்” என்று திமுக சார்பில் போஸ்டர் அடித்து கொண்டாடுவதாக புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் லென்ஸ் மூலம் தேடிப் பார்த்தோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் ”இதுக்கே பயந்தா எப்டி? இனிதான் ஆரம்பம்... இ.பி.எஸ் டெல்லி பயணம் குறித்து தி.மு.க போஸ்டர்; கோவையில் மீண்டும் பரபரப்பு” என்ற தலைப்பில் இது குறித்து செப்டம்பர் 19 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் இதுக்கே பயந்தா எப்டி ? இனி தான் ஆரம்பம் என்று வாசகங்களுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் டெல்லி பயணம் குறித்து விமர்சிக்கும் விதமாக போஸ்டர்கள் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தி.மு.கவின் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மசூது சார்பில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Z Tamil News ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில், கோவையில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதுக்கே பயந்தா எப்டி? இனிதான் ஆரம்பம் என்ற வாசகத்துடன் திமுகவினர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல் Sathiyam News ஊடகத்திலும், ”'இதுக்கே பயந்தா எப்படி ? இனி தான் ஆரம்பம்' EPS க்கு திமுக கொடுத்த தரமான பதிலடி” என்ற தலைப்பில் செப்டம்பர் 19 அன்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் செப்டம்பர் 27 அன்று நடந்தது. ஆனால் பரவி வரும் போஸ்டர் குறித்து, செப்டம்பர் 19ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளதை உறுதி செய்ய முடிந்தது.
முடிவு:
எனவே, கரூர் நெரிசலில் 11 குழந்தைகளை உயிரிழந்த நிலையில், ”இதுக்கே பயந்தா எப்டி? இனிதான் ஆரம்பம்” என்று திமுக சார்பில் போஸ்டர் அடித்து கொண்டாடுவதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானவை.