யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாடம் நடத்தும் இந்த நிகழ்வு சமீபத்தில் நடந்தது தான் என்று இதன் ஏற்பாட்டாளர் கார்த்திக் மாரிபிச்சை விளக்கமளித்துள்ளார்.
பரவிய செய்தி
16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
விரிவான விளக்கம்
மதுரை அவனியாபுரம் அரசுப் பள்ளியில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தால் பாடம் நடத்தும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்வு ஓராண்டுக்கு முன்பே நடந்தது என்றும் திமுக ஆட்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியை தற்போது தவெக ஆட்சியில் நடந்ததாக ‘புதிய தலைமுறை’ தவறாக செய்தி வெளியிட்டிருக்கிறது என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. திமுகவின் ‘IT Wing’ பக்கமும் இதனை பரப்பி வருகிறது.
16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.#DailyTalks | #TVKVijayFails https://t.co/Eae9ZPnjQ5 pic.twitter.com/HnynU8zFOB

உண்மை என்ன?
இந்த நிகழ்வு குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’News 18 தமிழ்நாடு’, ‘தந்தி டிவி’, ‘The Hindu’ போன்ற வெகுமக்கள் ஊடகங்களில், ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாடம் நடத்தும் இந்த நிகழ்வு சமீபத்தில் நடந்ததாகவே செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்ச்சியை நடத்திய ’கார்த்திக் மாரிப்பிச்சை’ என்பவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த நிகழ்வு 2026 ஜூன் 17ஆம் தேதியன்று நடந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கார்த்திக் மாரிப்பிச்சை அவர்களை நமது ‘You Turn’ சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ‘ இந்த நிகழ்வு 2026 ஜூன் 17 புதன்கிழமை தான் நடந்தது. ஓராண்டுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுவது தவறானது’ என்று குறிப்பிட்டார்.
மேலும், ’நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் பின்புலத்தில் உள்ள கரும்பலகையில் ‘16/7/2025’ தேதி எழுதப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு தான் இது ஓராண்டுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி என்று பரப்புகிறார்கள்’ என்று கேட்டோம். இதற்கு பதிலளிக்கையில், ‘அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான சரியான வகுப்பறை கிடைக்கவில்லை. இதனால், அதே பள்ளியில் உள்ள ஒரு ஆய்வக அறையில் நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த அறை நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கரும்பலகையில் அந்த தேதி அப்படியே இருந்திருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது தான்’ என்று விளக்கமளித்தார்.
இதிலிருந்து, ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாடம் நடத்தும் இந்த நிகழ்வு ஓராண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல, சமீபத்தில் நடந்தது தான் என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
ஓராண்டுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை தற்போது தவெக ஆட்சியில் நடந்ததாக ‘புதிய தலைமுறை’ தவறாக செய்தி செய்தி வெளியிட்டிருப்பதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். திமுக ‘IT Wing’-ம் இந்த பொய்யான தகவலை பரப்பி வருகிறது.