யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசி முடித்த பிறகு, அவருக்கு கையில் வேல் ஒன்று கூட்டத்திலிருந்து தரப்படுகிறது. தனது இடது புறமிருந்து தரப்படும் அந்த வேலை கையில் வாங்கிக் கொண்ட உதயநிதி, பின்னர் பிரச்சார வேனிற்கு கீழே இருக்கிற தனது உதவியாளர்களிடம் கொடுக்கிறார். அதேபோல் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட போதும் அதையும் கீழே தனது உதவியாளர்களிடம் தருகிறார்.
பரவிய செய்தி
உதயநிதியிடம் வேல் கொடுத்த போது அதை வாங்கி கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் ஆனால் புத்தர் சிலையை மட்டும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார் - தினமலர்

விரிவான விளக்கம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 04 அன்று ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் உதயநிதியிடம் வேல் கொடுத்த போது அதை வாங்கி கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் ஆனால் புத்தர் சிலையை மட்டும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார் என்று தினமலர் போன்ற ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
உப்பு போட்டு
சோறு தின்னும்
இந்துக்களுக்கு
சமர்ப்பணம்..! pic.twitter.com/LOU1vKpD7E
உண்மை என்ன?
ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வீடியோ குறித்து பார்த்தோம். அப்போது News7 Tamil ஊடகத்தில் “உதயநிதி ஸ்டாலின் பரப்புரை | ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி” என்ற தலைப்பில் அதன் முழு வீடியோவும் இருந்ததை பார்க்கமுடிந்தது.
அதில் 45:09 நிமிடத்தில் துணை முதல்வர் வேல் வாங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. தனது இடது புறமிருந்து தரப்படும் அந்த வேலை கையில் வாங்கிக் கொண்ட உதயநிதி, பின்னர் பிரச்சார வேனிற்கு கீழே இருக்கிற தனது உதவியாளர்களிடம் கொடுக்கிறார். அதேபோல் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட போதும் அதையும் கீழே தனது உதவியாளர்களிடம் தரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதே போல் அந்த வீடியோவில் 47:06 நிமிடத்தில், இரண்டாவது வேல் உதயநிதிக்கு வழங்கப்படுகிறது. வேலை கையில் வாங்கிய உதயநிதி கூட்டத்தினரிடம் காண்பித்த பிறகு, வேட்பாளர் அதை வாங்கி பிரச்சார வேனிற்குள் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
முடிவு:
எனவே, ராமநாதபுரம் பிரச்சாரத்தில் வேல் கொடுத்தபோது உதயநிதி வாங்க மறுத்ததாகவும், புத்தர் சிலையை மட்டும் வாங்கிக் கொண்டதாகவும் தினமலர் போன்ற ஊடகங்கள் தவறாகச் செய்தி பரப்பி வருகின்றனர்.