யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்துச் செய்யப்பட்ட நூதன போராட்டம் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் ஒரு சாமானியன் மின் கட்டணம் செலுத்துகிறார்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் 4.83 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாமானியர் ஒருவர் கோவணம் கட்டிக்கொண்டு மின்கட்டணம் செலுத்த வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவில் கோவணம் கட்டிக்கொண்டு இருப்பவர், ’பாண்டிச்சேரியில் மின் கட்டணம் உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனப் பேசுவதைக் கேட்க முடிகிறது. மேலும் டெல்லி, பஞ்சாபில் 100 யூனிட் குறைவான கட்டணம் உள்ளது. பாண்டிச்சேரியில் மட்டும் ஏன் இப்படியுள்ளது என்கிற கேள்வியை எழுப்புகிறார்.
புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதுதொடர்பாகத் தினமலர் யூடியூப் பக்கத்தில் வெளியான செய்தியில், எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் 100 யூனிட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 ஆக இருந்த மின்கட்டணம் ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 101 - 200 யூனிட்டுக்கு 4 ரூபாயாகவும் 201 - 300 யூனிட் வரை 6 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வைக் கண்டித்து சுத்தம் சுந்தர் ராஜன் என்ற சமூக ஆர்வலர் கோவணம் கட்டிக்கொண்டு புதுச்சேரி உப்பளத்திலுள்ள மின்துறை அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வீடுகளில் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவே புதுச்சேரியில் ரூ.270 கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த சலுகை நடைமுறையில் உள்ளது. இம்மாதிரியான விஷயங்களை குறிப்பிட்டுத்தான் சுத்தம் சுந்தர ராஜன் நூதனமான முறையில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் நடந்த இடமே தமிழ்நாடு எனத் தவறாக பரப்புகின்றனர்.
இவர் இதற்கு முன்னர் புதுச்சேரியில் சாலைகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும் நூதனமான முறையில் போராட்டம் செய்துள்ளார். புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
புதுச்சேரி மின்கட்டண உயர்வைக் கண்டித்துச் செய்யப்பட்ட நூதன போராட்டத்தைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.