யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறியதாக ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள நியூஸ்கார்டு திரிக்கப்பட்ட செய்தியே.
பரவிய செய்தி
"திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - வி.சி.க தலைவர் திருமாவளவன்

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளநிலையில், அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் கூட்டணி குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் "திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று கூறியதாகக் குறிப்பிட்டு 'பாலிமர் செய்தி' நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் இந்த நியூஸ் கார்டை குறிப்பிட்டு, திமுக கூட்டணியில், ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமையவுள்ளது. அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
யாரை சேர்த்தாலும்.....அப்போ பாமக...?
வந்தால் நிலைபாடு மாறுமா..
அன்புமணி அதிமுகவோட ஆல்ரெடி இணைந்துவிட்டதால் சொல்லிருப்பாரா..
இன்னும் மருத்துவர் ராமதாஸ் பாக்கி இருக்காரே..
திமுகவுடன் வந்தால் நோ ப்ராப்ளம் என சொல்கிறாரா அண்ணன் திருமா..😎😎 pic.twitter.com/6b4nqRSha9
பாமக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இடம்பெறாது என்று கூறினார் திருமா ஆனால் முதலமைச்சர் எடுக்க முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்திருப்பது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தரப்பு திமுகவில் இணைய போகிறது என நினைக்கிறேன் 🤔 pic.twitter.com/WbGPb1LSJb
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், “திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதாக ‘பாலியர் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தி திரிக்கப்பட்ட செய்தியே என்பதை அறிய முடிந்தது.
திருமாவளவன் இது குறித்து பேசியுள்ள முழு வீடியோவில், “2011 பொதுத்தேர்தலுக்கு பிறகு சாதிய மற்றும் மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்; அக்கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம்” என்றே கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “திமுக கூட்டணியில் எந்த கட்சி இருக்க வேண்டும் என்கிற முடிவை திமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து திமுகவுக்கு ஆலோசனை கொடுக்கும் அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்” என்றும் பேசியுள்ளார்.
இதனை, விசிக தலைவர் திருமாவளவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவை ஆய்வு செய்ததன் மூலமும் உறுதி செய்ய முடிகிறது. இந்நிலையில் திருமாவளவன் பேசியுள்ளதை 'பாலிமர் நியூஸ்' தவறாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர் சந்திப்பில்... pic.twitter.com/IUklBPbHjh
இதே போன்று, கூட்டணி குறித்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும், “பாஜக, அதிமுக கட்சிகள் இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம். பாமகவின் ராமதாஸ் அணி திமுகவில் இணைந்தால் 14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் நடப்போம்” என்றே திருமாவளவன் கூறியுள்ளார்.
முடிவு:
நம் தேடலில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறியதாக ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள நியூஸ்கார்டு திரிக்கப்பட்ட செய்தியே என்பது உறுதியாகிறது.