யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிருத்விராஜ் சௌஹான் இறந்து 16 ஆண்டுகளுக்கு பின்புதான் முஹம்மத் கோரி இறந்தார் என்று வரலாற்றுத் தரவுகள் உள்ளன.
பரவிய செய்தி
18 முறை தோற்று புறமுதுகு காட்டி ஓடியவனே வீரனாகவும், அவனை ஓடவிட்டவனை பெயர் கூட தெரியாமல் இன்றளவும் இருக்கும் மண்ணின் மைந்தர்கள்..

விரிவான விளக்கம்
”முதல் தாரைன் யுத்தத்தில், பிருத்விராஜ் சௌஹானால் தோற்கடிக்கப்பட்ட முஹம்மத் கோரி, மீண்டும் இரண்டாம் தாரைன் யுத்தத்தில் சூரிய அஸ்தனமான பின்பு இரவு நேரத்தில், படையெடுத்து வந்து பிருத்விராஜ் சௌஹானை சிறைபிடித்தார். சிறைபிடிக்கப்பட்ட பிருத்விராஜ் சௌஹானின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டது. கவிஞர் சாந்த் பர்தாய் என்பவரின் சாதூரியமான செயலின் உதவியுடன் பிருத்விராஜ் சௌஹான் கண்கள் இல்லாமலே அம்பு ஏய்து முஹம்மத் கோரியை கொன்றார்” என்று பலர் கூடி கேட்டுக்கொண்டிருக்கும் கதாகாலட்சேபம் ஒன்றில் பெண் ஒருவர் பேசுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு, ’இந்த வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்’ என்று பொருள்படும்படி எழுதி சமூக வலைதளமான ’எக்ஸ்’ல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
கதாகாலட்சேபத்தில் பேசுபவர் குறிப்பிட ’தாரைன் யுத்தம்’ பற்றி இணையத்தில் தேடினோம். இந்த தாரைன் யுத்தம் ’தாரோரி யுத்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
அதில் நமக்கு கிடைத்த தகவல்களின்படி, ’முதல் தாரைன் யுத்தம் 1191ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முஹம்மத் கோரியால் வழிநடத்தப்பட்ட ‘குரித் (Ghurid)' படையை அஜ்மீர் மற்றும் டெல்லியின் ஆட்சியாளரான பிருத்விராஜ் III சௌஹான் மற்றும் பனாரஸின் ’ஜெய் சந்த்’ இணைந்து எதிர்கொண்டனர். இந்த யுத்தத்தில் முஹம்மத் கோரி தோற்கடிக்கப்பட்டு தப்பித்து கஜினிக்குத் திரும்பினார்’ என்று தெரியவருகிறது.

ஆனால், ‘ஜியா உத்-தின் துலாகி’ என்பவரின் தலைமையில் 2,000 படைவீரர்களை ’தபர்ஹிந்த்’ கோட்டையை பாதுகாக்க விட்டுவிட்டு சென்றார் கோரி. இந்த வீரர்கள் 13 மாதங்களாக இந்த கோட்டையைப் பாதுகாத்ததன் மூலம் ராஜ்புத் படையை தாமதப்படுத்தினர். இந்த 13 மாத காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட முஹம்மத் கோரி, 120,000 வீரர்களைக் கொண்ட வலிமையான படையைக் திரட்டினார்.

இந்த வீரர்களைக் கொண்டு, 1192ஆம் ஆண்டில் இரண்டாம் தாரைன் யுத்தத்தை நடத்தி பிருத்விராஜ் சௌஹானை தோற்கடித்தார். இந்த இரண்டாம் தாரைன் யுத்தத்தில் ஜெய் சந்த் பிருத்விராஜ் சௌஹானுக்கு ஆதரவாக பங்கேற்கவில்லை. இந்த யுத்தத்தை வெல்வதில் ’குரித்’ இராணுவ குதிரைப்படையின் தந்திரங்கள் முக்கியப் பங்கு வகித்தது. இந்த யுத்தத்தின் முடிவில் பிருத்விராஜ் III சௌஹானும் அவரது தளபதிகளும் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டனர்.
மேற்கூறிய வரலாற்று விவரங்களில் இருந்து, ’தபர்ஹிந்த்’ கோட்டையை 13 மாதங்களாக தக்கவைத்துக்கொண்டது, அந்த கால அவகாசத்தை பயன்படுத்தி பெரும்படையை திரட்டியது, செம்மையான போர் யுத்திகளை கையாண்டது, பிருத்விராஜ் சௌஹானுக்கு ஜெய் சந்த் உதவிக்கு வராமல் போனது ஆகிய காரணங்கள்தான் பிருத்விராஜ் சௌஹானின் தோல்விக்கு காரணமாகும். இதிலிருந்து, இரவில் தாக்கி முஹம்மத் கோரி பிருத்விராஜ் சௌஹானை சிறைபிடித்தாக சொல்லப்படுவது உண்மைக்கு மாறானதாகும்.
மேலும், வரலாற்றின்படி முஹம்மத் கோரி 1206ஆம் ஆண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிருத்விராஜ் சௌஹான் 1192 ஆண்டில் நடந்த இரண்டாம் தாரைன் யுத்தத்தில் கொல்லப்பட்டார். இதிலிருந்து முஹம்மத் கோரியை பிருத்விராஜ் சௌஹான் அம்பு ஏய்து கொன்றார் என்பது தவறான தகவல் என்பது தெளிவாகிறது.
முடிவு:
பிருத்விராஜ் சௌஹான் இறந்து 16 ஆண்டுகளுக்கு பின்புதான் முஹம்மத் கோரி இறந்துள்ளார். இதனால், முஹம்மத் கோரியை பிருத்விராஜ் சௌஹான் அம்பு ஏய்து கொன்றார் என்ற பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.