யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி A1 குற்றவாளி என்றால் பிடித்து உள்ளே போடுங்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவளித்த திண்டுக்கல் சீனிவாசன்.
விரிவான விளக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து சில விளக்கங்களை தெரிவித்திருந்தார். அதில், “எடப்பாடி பழனிசாமியே தற்காலிக பொதுச் செயலாளர்தான். அப்படியிருக்கும் போது அவர் என்னை நீக்க உரிமை இல்லை. 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எனக்கு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கியது வேதனையை தருகிறது. அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஏன் கொடநாடு கொலை, கொள்ளை குறித்து எதுவும் பேசவில்லை” என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனக் கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், திண்டுக்கல் சீனிவாசன் “புடிச்சு உள்ள போடுங்களேன், நாங்களா வேண்டாம் என்கிறோம். சட்டப்படி போடுங்க“ என்று கூறியிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பழனிச்சாமி ஏ1 குற்றவாளி யாக இருந்தால் பிடித்து உள்ள போடுங்க என்று உண்மையை ஒத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள்... pic.twitter.com/5lseIUhnvs
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி A1 குற்றவாளி என்றால் பிடித்து உள்ளே போடுங்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவளித்த திண்டுக்கல் சீனிவாசன். pic.twitter.com/URzEWeiPpU
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியது குறித்து “NewsTamil 24X7” யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில் திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், “புடிச்சு உள்ள போடுங்களேன், நாங்களா வேண்டாம் என்கிறோம். சட்டப்படி போடுங்க தம்பி. சட்டம் இருந்து, அவர் ஏ1-னாக இருந்து, அக்யூஸ்டாக இருக்கிறார் என்றால், போலீஸ் என்ன செய்கிறார்கள். இல்லை என்றால் தி.மு.க ஆட்சிதான் என்ன செய்கிறது? நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி இருந்தது தானே கொடநாடு வழக்கு. உண்மையிலேயே திராணி இருந்து, தைரியம் இருந்து, சரியான சட்டம் இருந்தால் பிடிச்சி ஏன் ஜெயில்ல போடமா வச்சிருக்காங்க.இவருக்கு (செங்கோட்டையன்) ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே?“ என்றே கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.