யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருக்கிறார். அதை கையில் ஏந்திய படத்தை பதிவிட்டும் இருக்கிறார். மற்றொரு பதிவில் வேறொரு கத்தியால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டு உள்ளார்.
பரவிய செய்தி
இது போன்ற கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டினால் உடனே காவல்துறை வந்து கைது செய்யுமே?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டுகிறாரே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா? கைது செய்யுமா ?
அல்ல சட்டம் ஏழைகளுக்கு தானா? தி.மு.க அரசியல்வாதிகளுக்கு இல்லை என காவல்துறை கூறுமா?

விரிவான விளக்கம்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 27 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழகம் முழுவதும் ஏராளமான அரசியல் தலைவர்களும், திமுகவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பெரிய வாளை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதாக பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா புகைப்படம் ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டுகிறாரே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா? கைது செய்யுமா ? என்றும், சட்டம் ஏழைகளுக்கு தானா? தி.மு.க அரசியல்வாதிகளுக்கு இல்லை என காவல்துறை கூறுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். அதே போல் சமூக ஊடகங்களில் பலரும் பட்டக்கத்தியால் கேக் வெட்டிய உதயநிதி என்றும் பரப்பி வருகின்றனர்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினால் பாயும் வழக்கு! உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா?@Udhaystalin @arivalayam pic.twitter.com/c363cY6E1a
ரவுடிங்க பெரிய கத்தில கேக் வெட்டினால் கைது பண்றீங்க இப்போ பண்ணுங்க இல்ல அறிவுரை சொல்லுங்க பாப்போம் pic.twitter.com/BnWvod6Pls
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Thoothukudi S Joel என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ”தாய்த் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாய்! மண், மொழி, மானம் காத்து இனப் பகைவர்க்கு சிம்ம சொப்பனமாய்!! கந்தக விழிகாட்டி, கர்ஜனை முழக்கமிட்டு திராவிடக் கூர்வாளாய் களமாடும்..ஈடு இணையற்ற “இளம் தலைவர்” பிறந்த நாளில் “கொள்கைப் போர்வாள்” பரிசளித்த உணர்ச்சிமிகு தருணம்…” என்று பதிவிட்டு, உதயநிதி அவர்கள் வாளை கையில் ஏந்திய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இதிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த வாளில் தான் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டதா என்பது குறித்து தேடினோம். அப்போது அவரது முகநூல் பக்கத்தில் மற்றொரு பதிவு இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் ”துள்ளிப் பாயும் மாணவரும்....துடிப்பு மிக்க இளைஞர்களும்...அண்ணா..அண்ணா..என்றே பந்தம் பாசம் காட்டும் அன்பகத் தலைவராம் வெற்றிச் சூரியனின் அகவைத் திருநாளில், இனிப்போடும், மகிழ்வோடும் வாழ்த்தி வணங்கி மகிழ்ந்த பொன்னான தருணம்….” என்று குறிப்பிட்டு வேறொரு கத்தியால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டுருந்தார்.
முடிவு:
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருக்கிறார். அதை கையில் ஏந்திய படத்தை பதிவிட்டும் இருக்கிறார். மற்றொரு பதிவில் வேறொரு கத்தியால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டு உள்ளார். ஆனால், வாளால் கேக்கை வெட்டியதாக பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா தவறாகப் பரப்பி வருகின்றனர்.