யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவாவில் படகு மூழ்கி பலர் உயிர் இழந்ததாகப் பரவும் வீடியோ காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
கோவா விபத்தில் 23 உடல்கள் மீட்கப்பட்டு, 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 64 பேர் காணவில்லை. அதிக சுமை ஏற்றுவதில் படகு உரிமையாளரின் பேராசை, பயணிகளின் அதீத நம்பிக்கை. மிகவும் சோகம், சோகம்.

விரிவான விளக்கம்
கோவாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் இறந்ததாகவும் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 64 பேர் காணவில்லை என்றும் அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ பற்றி ‘Al Jazeera’ ஊடகத்தில் கடந்த 3ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. அச்செய்தியில் இந்த விபத்து காங்கோ நாட்டிலுள்ள கிவு ஏரியில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனை வைத்து மேற்கொண்டு தேடியதில், ‘The Guardian’ தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிந்தது. காங்கோ நாட்டில் Goma என்ற பகுதிக்கு அருகேயுள்ள கிவு என்ற ஏரியில் 80 பேர் ஏற்றிச்செல்ல வேண்டிய படகு 278 பேரை ஏற்றிச் சென்றுள்ளது. அதிக சுமையின் காரணமாக இந்தப் படகு நீரில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் 78 பேர் இறந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்தி 'AP News', ‘Reuters’, ‘BBC’ தளங்களிலும் வெளியாகியுள்ளது. அவற்றிலும் மேற்கண்ட தகவலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோவாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. நல்வாய்ப்பாக அப்படகிலிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய செய்தி ‘Digital Goa’ என்ற உள்ளூர் ஊடகத்தில் செய்தியாக வெளிவந்துள்ளது.
அது மட்டுமின்றி பரவக்கூடிய வீடியோ கோவாவில் நடந்தது இல்லை எனக் கோவா காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இவற்றிலிருந்து காங்கோ நாட்டில் நடந்த சம்பவத்தை கோவாவில் நடந்ததாகத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
கோவாவில் படகு மூழ்கி பலர் உயிர் இழந்ததாகப் பரவும் வீடியோ காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தின்போது எடுக்கப்பட்டது. காங்கோவில் நடந்த இந்த விபத்தில் 78 பேர் இறந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.