யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான். பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தவெக ஆட்சியில் சாதனை! இனி நாம் நமது புகார்களை 1100 என்ற உதவி எண் மூலமும், "CM Helpline" என்ற இணையதளம் மூலமும் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் எனக் கூறி இணையதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது times of india ஊடகத்தில், “Tamil Nadu gets centralised toll-free helpline for grievances, 1100” என்ற தலைப்பில் பிப்ரவரி 14, 2021 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக '1100' என்ற கட்டணமில்லா எண்ணை ஒதுக்கி, ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர்ப்பு முதலமைச்சர் உதவி எண் மேலாண்மைத் திட்டம் தொடங்கக்கப்பட்டது என்றும், இத்திட்டத்திற்கு ரூ.69.21 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது.

இது குறித்து மேலும் தேடிய போது, புதிய தலைமுறை ஊடகத்தில் “'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை: தமிழக அரசு அரசாணை” என்ற தலைப்பில் நவம்பர் 14, 2021 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ அமைப்பு ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு, ‘முதல்வரின் முகவரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம், ஏற்கனவே இருந்த பல புகார் கையாளும் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது.

முடிவு:
எனவே, “தவெக ஆட்சியில் சாதனை! இனி நாம் நமது புகார்களை 1100 என்ற உதவி எண் மூலமும், "CM Helpline" என்ற இணையதளம் மூலமும் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்” எனக் கூறி பரப்பப்படும் செய்திகள் தவறானவை. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான்.
