யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் நாட்டிலேயே இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் அடைந்தார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், 100யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது என்றும் பேசியிருந்தார்.
உண்மை என்ன?
முதல்வர் விஜய் பேசிய இந்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu ஊடகத்தின் இணையதளப்பக்கத்தில் “Free power for ryots to continue: Karunanidhi” என்ற தலைப்பில் செப்டெம்பர் 16, 2010 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 1990-ஆம் ஆண்டிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு திகழ்ந்ததாகவும், அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து விகடன் ஊடக்கத்திலும், ஆகஸ்ட் 08, 2018 அன்று “1957 முதல் 2018 வரை... கருணாநிதி விவசாயத்துக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1990-ம் ஆண்டு பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அறிவித்தார். இதனால் பலன் அடைந்த விவசாயிகளின் அப்போதைய எண்ணிக்கை 16 லட்சம். இந்தியாவிலேயே முதன்முதலாகக் விவசாயிகளுக்காக ‘மின்சாரம் இலவசம்’ என்று கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் அது என்று கூறப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று கூறி தமிழ்நாடு முதல்வர் விஜய் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.
