யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்று அறிவித்தார். அதன்படி டிசம்பர் 19, 2025 அன்று 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரவிய செய்தி
தமிழ் நாட்டில் முதல் முறையாக தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல் அமைச்சர் தளபதி விஜய்

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
தமிழ் நாட்டில் முதல் முறையாக தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல் அமைச்சர் தளபதி விஜய் 🥺🥲❤️ pic.twitter.com/PwKTWXDyLj
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தினமணி ஊடகத்தில் நவம்பர் 15, 2025 அன்று “சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள்: மு.க. ஸ்டாலின்” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடியப் போது, தினத்தந்தி ஊடகத்தில், “சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம்” என்ற தலைப்பில் டிசம்பர் 19, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ETV Bharat ஊடகத்தில், இது குறித்து மார்ச் 09, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் OMR சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு அருந்தும் அறை, ஓய்வு அறை அமைக்க கட்டுமான பணி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வு அறை பணியை, தவெக ஆட்சியில் ஏற்படுத்தி தரப்பட்டதாக தவறாக பரப்புகின்றனர்.