யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெள்ளி அலமாரி செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த நகைக்கடை நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டார். அதனை அவர் வாங்கவில்லை.
பரவிய செய்தி
வெள்ளத்தில் தத்தளிக்கும் மதுரை... தவிக்கும் மக்கள்... வெள்ளி பெட்டகம் வாங்கி துர்கா தர்க்கம்...

விரிவான விளக்கம்
மதுரையில் மழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி வெள்ளி அலமாரி வாங்கியுள்ளதாக ’நியூஸ் ஜெ’ செய்தி வெளியிட்டுள்ளது. இதே தகவலை பாஜகவினரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவக்கூடிய தகவல் குறித்து தேடியதில், வெள்ளி அலமாரி பற்றி ’விகடன்’ தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தது. அதில், சுக்ரா ஜூவல்லரி சார்பில் தயாரிக்கப்பட்ட வெள்ளி அலமாரி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்ததாகவும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள சுக்ரா ஜூவல்லரி நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 16,17ஆம் நூற்றாண்டுகளின் பாரம்பரிய இந்திய ஓவிய பாணிகளால் இந்த அலமாரி வடிவமைக்கப்பட்டு, 14 பேரால் சுமார் 6 மாத காலத்தில் செய்யப்பட்டுள்ளது.
160 கிலோ எடை கொண்ட இந்த அலமாரியின் சந்தை மதிப்பு குறித்துக் கேட்கும்போது, இது விற்பனை நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது கிடையாது. இந்தியாவின் கலைத்திறனைக் காண்பிக்கவே செய்துள்ளோம். இருப்பினும் இதன் மதிப்பு ரூ.3.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தனியார் நகைக்கடை வெள்ளியில் அலமாரி செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் வெள்ளி அலமாரி வாங்கியதாகத் தவறான செய்தியை 'நியூஸ் ஜெ' வெளியிட்டுள்ளது.
முடிவு:
முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரி வாங்கியதாக 'நியூஸ் ஜெ' வெளியிட்ட செய்தி தவறானது. தனியார் நகைக்கடை ஒன்று வெள்ளி அலமாரி செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது தொடர்பான நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த அலமாரி விற்பனை நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது அல்ல.