யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காமராஜர் இறப்பதற்கு 6 ஆண்டுகள் முன்னரே அண்ணாதுரை இறந்துவிட்டார்.
பரவிய செய்தி
தாத்தா காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்" - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
விரிவான விளக்கம்
மு.கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து தனது 77ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அரசியல் கொள்கை ஆகியவற்றை தாண்டி இம்மாதிரியான துயரமான தருணங்களில் ஒரு கட்சியின் தலைவர்கள் மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு ஆறுதல் கூறுவது தமிழர் பண்பாடு வாழ்க்கை முறை என்று பேசினார். அப்போது “தாத்தா காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்" என்று சீமான் கூறினார்.
உண்மை என்ன?
காமராஜர் இறப்பு குறித்த செய்தியை இணையத்தில் தேடியபோது, ‘BBC தமிழ்’ செய்தித்தளத்தில் “தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையை காணமுடிந்தது.
அதில், ‘1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜர் காலமானார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘Britannica’ இணையதளத்திலும் கூட காமராஜர் 1975 அக்டோபர் 2 அன்று இறந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் C.N.அண்ணாதுரை இறந்த தேதி பற்றி இணையத்தில் தேடியபோது, ‘The Hindu’ செய்தித்தளத்தில் ‘அண்ணாதுரை ஏன் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்’ என்று தலைப்பிட்ட செய்திக் கட்டுரையில் ‘ 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று முதல்வர் பதவியில் இருக்கும்போது இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூட ‘அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969 அன்று இறந்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, காமராஜர் இறப்பதற்கு 6 ஆண்டுகள் முன்பே அண்ணாதுரை இறந்துவிட்டார் என்பது தெரியவருகிறது.
முடிவு:
காமராஜர் இறப்பதற்கு 6 ஆண்டுகள் முன்னரே அண்ணாதுரை இறந்துவிட்டார். “காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்" என்று சீமான் தவறான தகவலை கூறுயுள்ளார்.