யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த காலங்களில் பெய்த மழையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போதைய மழையுடன் தொடர்புப்படுத்தி பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை, பள்ளிக்கரணை அருகில் உள்ள நாராயணபுரம் ஏரிக்கரை உடைந்ததாக புதிய தலைமுறையில் செய்தி வெளியாகி இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
மேலும் தற்போது பெய்யும் மழையுடன் தொடர்புப்படுத்தி பல புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
1. பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள நாராயணபுரம் ஏரிக்கரை உடைந்ததாக பரவக்கூடிய செய்தி குறித்து புதிய தலைமுறை ஊடகத்தில் தேடினோம். ‘பள்ளிக்கரணையில் தேங்கிய மழைநீர்’ என நேற்றைய தினம் புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், கடந்த வருடம் மிக்ஜாம் புயலின்போது பெய்த கனமழையில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று. நாராயணபுர ஏரிக்கரை உடைந்து இப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது என செய்தியாளர் கூறுவதைக் கேட்கமுடிகிறது.
ஆனால், பரவக்கூடிய வீடியோவில் கடந்த ஆண்டு என செய்தியாளர் சொல்லக்கூடிய தகவல் எடிட் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மழையின்போது கடந்த ஆண்டு நிகழ்வையும் செய்தியாளர் சுட்டிக்காட்டியதை எடிட் செய்து தவறாக பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது. கடந்த ஆண்டு நாராயணபுரம் ஏரிக்கரை உடைந்த தகவலை இதே நிருபர் கூற புதிய தலைமுறையில் செய்தியாகியுள்ளது.
2. சென்னையில் பெய்த மழையில் இடுப்பளவு தேங்கியுள்ள மழை நீரில் இரண்டு இளைஞர்கள் வாகனம் ஓட்ட முயற்சித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
பரவக்கூடிய வீடியோவில் இருசக்கர வாகன பதிவு எண் ’AP’ எனத் தொடங்குகிறது. ஆந்திர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பதால் இதுபற்றி மேற்கொண்டு தேடியதில், இதே வீடியோ கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டு இருந்ததை காணமுடிந்தது. ஆனால், சென்னையில் தொடர்மழை என்பது அக்டோபர் 14ஆம் தேதி முதல்தான் பெய்துவருகிறது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஆந்திராவில் பெய்த கனமழையில் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த வீடியோ ஆந்திராவின் எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என முழுமையான விவரம் அறிய முடியவில்லை. இருப்பினும் இந்த வீடியோவுக்கும் சென்னை மழைக்கும் தொடர்பில்லை என்பது மட்டும் உறுதியாகிறது.
3. தற்போதைய சென்னை மழையில் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வீடியோ ஒன்றை மோடி ஆதரவாளர் எக்ஸ் பக்கம் ஒன்று பதிவிட்டுள்ளது. இடுப்பளவுள்ள தண்ணீரில் மாணவர்கள் தங்களின் உடமைகளை கொண்டு செல்கின்றனர். அதில் ஒருவர் 'யாரும் இந்த கல்லூரியில் சேராதீர்கள், சேர்ந்தாலும் விடுதியில் சேராதீர்கள்' என சொல்கிறார்.
அந்த வீடியோவில் உள்ள பேருந்து ஒன்றில் ‘Sathyabama’ என்ற பெயர் இருப்பதை காணமுடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில், ‘sathyabama flood 2023’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று கிடைத்தது. பரவக்கூடிய வீடியோவில் பேசக்கூடிய அதே இளைஞர் இந்த வீடியோவிலும் உள்ளார். இது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இது தற்போதைய மழையுடன் தொடர்பில்லாத வீடியோ என்பதை அறியமுடிகிறது.
4. ’கனமழையினால் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. நாம் ஒன்றினைந்து உதவி செய்ய வேண்டுமென’ எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பரப்பப்படுகிறது.
அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், ‘Businessline’ ஊடகத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை காணமுடிந்தது. அப்படம் 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போதைய மழையுடன் தொடர்புப்படுத்தி தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
5. வீட்டிற்குள் தண்ணீர் வருவதுபோல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
இது 2021ஆம் ஆண்டில் இருந்து பரவக்கூடிய ஒரு பொய் செய்தி. அப்போதே இது பற்றிய உண்மைகள் யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். மு.க.ஸ்டாலின் அப்படி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர் சொன்னதாக சன் செய்தி பெயரில் மீண்டும் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

6. சென்னையில் தற்போது பெய்த மழையில் தனது வீட்டில் புகுந்த தண்ணீரில் ஒருவர் குளிப்பதாக வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. ஆண்டுதோரும் மழைக்காலங்களில் இந்த வீடியோவை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீடியோ 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே ‘NewsGlitz’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை தற்போதைய சென்னை மழையுடன் தொடர்புப்படுத்தி பரப்புகின்றனர்.
முடிவு:
சென்னையில் கடந்த காலங்களில் பெய்த மழையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போதைய மழையுடன் தொடர்புப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
