யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுழற்சி முறை அடிப்படையில் வழங்கப்பட்ட தலைமை பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையத்தின் திறனுக்காக வழங்கப்பட்டதாக திரித்து கூறுகிறார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
பரவிய செய்தி
“இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதை உலகம் அங்கீகரிக்கிறது. எனவேதான், 30 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, உலகின் 37 ஜனநாயக நாடுகளின் குழு, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்திற்கு (IDEA) தலைமை வகிக்க, இந்தியாவை தேர்வு செய்துள்ளது” - இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

விரிவான விளக்கம்
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாட்டில் உள்ள பல அறிவுஜீவிகளும் சமீப காலத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடைமுறைப்படுத்தியது, அதனை தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தியது. இதன் மூலம் பாஜகவிற்கு சாதகமாக வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் திருத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (International IDEA) தலைமை பொறுப்பிற்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசுகையில, “இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதை உலகம் அங்கீகரிக்கிறது. எனவேதான், 30 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, உலகின் 37 ஜனநாயக நாடுகளின் குழு, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்திற்கு (International IDEA) தலைமை வகிக்க, இந்தியாவை தேர்வு செய்துள்ளது” என்று கூறி வருகிறார்.
இன்று உலகம் முழுவதும், இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் சிறப்பாக நடைபெறுவதை அறிந்து கொண்டும், அங்கீகரித்தும் வருகிறது.
அதனால்தான், உலகின் 37 ஜனநாயக நாடுகள் இணைந்துள்ள உயர்ந்த அமைப்பு International Institute for Democracy and Electoral Assistance… pic.twitter.com/a9zlnrjdBW
உண்மை என்ன?
ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (International IDEA) தலைமைப் பொறுப்பு எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது குறித்து தேடியதில், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றைக் காணமுடிந்தது.

International IDEA நிறுவனத்திற்கான தலைமை பொறுப்பு, இதில் உள்ள உறுப்பு நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் (Rotation Method) தேர்வு செய்யப்படுவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2026ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு இந்தியா வரவேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வகையில் தான், 2026ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் சார்பாக இந்தியாவும் மொரிசியஸ்-ம் தலைமை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் 2033ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் சார்பாக துனிசியா ஏற்கனவே தலைமை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, International IDEA நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு இந்தியா இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டது அதன் செயல்பாடுகளுக்காக அல்ல, சுழற்சி முறை அடிப்படையில் மட்டுமே என்பது தெளிவாக விளங்குகிறது.
முடிவு:
சுழற்சி முறை அடிப்படையில் வழங்கப்பட்ட தலைமை பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையத்தின் திறனுக்காக வழங்கப்பட்டதாக திரித்து கூறி வருகிறார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.