யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நிலையாக இருந்து வருகிறது.
பரவிய செய்தி
”2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதாக” - S.G.சூர்யா, பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் அணி தலைவர்.
விரிவான விளக்கம்
’News தமிழ்’ செய்தித் தொலைக்காட்சி ‘The Court’ என்ற பெயரில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஜனவரி 24ஆம் தேதி நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்ட பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் அணி தலைவர் S.G.சூர்யா, ’2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதாக’ குறிப்பிட்டார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை தேடினோம். இந்திய அரசின் ‘தொழில் மற்றும் உள்நாட்டு வணிக வளர்ச்சி துறை’ இணையதளத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது.

அதில் 2022-23 முதல் 2024-25 நிதியாண்டு வரையிலாக எந்தெந்த மாநிலங்களில் அதிகமாக அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி மகாராஷ்ட்ரா முதல் இடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும், ஹரியானா ஆறாவது இடத்திலும் இருக்கின்றன.

அதேபோல், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் 'வணிகம் மற்றும் தொழிற்துறைக்கான இணை அமைச்சர் ‘ஜிதின் பிரசாதா’ சமர்பித்துள்ள ஆவணத்தில், 2020 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் மாநில வாரியாக செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த தகவல்களைக் காணமுடிகிறது.
அதில், மேற்குறிப்பிட்டுள்ளது போல மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ஹரியானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. அதில் 2022-2023 நிதியாண்டில் மட்டும் ஹரியான ஐந்தாவது இடத்திலும், தமிழ்நாடு ஆறாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் 2023-24, 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் தமிழ்நாடு மீண்டும் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

‘தொழில் மற்றும் உள்நாட்டு வணிக வளர்ச்சி துறை’ வெளியிட்டுள்ள தகவலின் படி 2022-23 நிதியாண்டிற்கு முன்னர் வரை சீராக வளர்ந்து வந்த அந்நிய நேரடி முதலீடு 2022-23 நிதியாண்டில் பலமான இறக்கத்தை சந்தித்துள்ளதை அறிய முடிகிறது.

ஆனால் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2024 வரையில் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் ஐந்தாவதாக இருக்கிறது என்பதைக் காணமுடிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நிலையாக இருப்பதை அறிய முடிகிறது.
முடிவு:
2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதாக பொய்யான தகவலை பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் அணி தலைவர் S.G.சூர்யா ஊடகங்களில் பரப்பிவருகிறார். ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களே S.G.சூர்யா கூறுவது உண்மையல்ல என்பதை தெரிவிக்கிறது.