யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவிலே உத்தரப் பிரதேச மாநிலத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரித்திடம் தான் அதிகமான வக்ஃப் சொத்துக்கள் இருக்கிறது. இதனை மறைத்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
இஸ்லாமியர்கள் நல்லவங்க தான் இருந்தாலும்... வக்ஃபு போர்டு பிடுங்கி சேர்த்த சொத்துக்கள் மக்கள் பார்வைக்கு!

விரிவான விளக்கம்
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வக்ஃப் (திருத்த) மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாட்டிள்ள வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தை மேம்படுத்தும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் வாதிட்டது. எதிர்க்கட்சிகள் இது முஸ்லிம் மக்களை பாகுபாட்டுடன் நடத்துவதாக இருக்கும் என்றும் இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் வாதிட்டது.
அடேங்கப்பா ….
எனக்கு ஒரே ஒரு கேள்வி
பாகிஸ்தானில் இந்துக்கள் விட்டு வந்த சொத்து எவ்வளவு ?
அது என்னாச்சு ?
அதை அங்கிருக்கும் இந்துக்கள்உரிமை ஆக மாற்ற முடியுமா ?? https://t.co/9CiqfTf1Hr
இந்நிலையில், ’இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் வக்ஃப் சொத்துகள் இருப்பதாகவும், இந்த சொத்துகள் எல்லாம் வக்ஃப் வாரியம் மக்களிடமிருந்து பிடுங்கி சேர்த்தது’ என்று பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
வக்ஃப் சொத்துகள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேடினோம்.
அதன்படி, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள வக்ஃப் சொத்துகளின் எண்ணிக்கை பற்றி இந்த சமூக வலைத்தளப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியானது தான் என்றாலும், அவை முழுமையானது அல்ல.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரித்திடம் 2,17,161 (அதாவது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான) வக்ஃப் சொத்துக்கள் இருக்கிறது. இதுதான் இந்தியாவிலே அதிக சொத்து எண்ணிக்கை உள்ள வக்ஃப் வாரியமாகும். இந்த வகையில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தான் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்பதாக காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களின் விவரங்களை மட்டும் கொடுத்து திரிக்கப்பட்ட தகவலை பாஜகவினர் பரப்புகின்றனர்.
மேலும், வக்ஃப் வாரியம் பொதுமக்களிடமிருந்து ’பிடுங்கி’ இந்த சொத்துகளைக் சேர்த்ததாக சொல்லப்படுவது மதவாத கண்ணோட்டமாகும். ’வக்ஃப் சொத்துக்கள்’ என்பது இஸ்லாமிய விதிகளின் படி தனிநபர் ஒருவர் மதத்திற்காக அல்லது தொண்டு மனப்பான்மையுடன் அளிக்கும் நன்கொடையைக் குறிப்பதாகும்.
இந்த வக்ஃப் சொத்துகளில் சர்ச்சைகள் ஏற்படும் போது, ’வக்ஃப் சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில் (Waqf Tribunal)’ வழக்காகத் தொடுக்கப்படும் என்றும் அதில் வக்ஃப் தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது’ என்றும் 1995 ஆண்டு பழைய வக்ஃப் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை திரித்து, வக்ஃப் வாரியம் வரைமுறை இல்லாமல் பொதுமக்கள் சொத்துகளை ஆக்கிரமிக்கிறது என்பது ‘இந்துத்துவவாதிகளால்’ நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரமாகும். மேலும், ஒரு மாநிலத்தில் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருப்பதை அந்த மாநிலத்திற்கு அவப்பெயராக கருதுவது மதவாத கண்ணோட்டத்தின் விளைவாகும்.
முடிவு:
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்று சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான தகவலாகும். மேலும், இந்த சொத்துகளை பொதுமக்களிடமிருந்து ’பிடுங்கி’ வக்ஃப் வாரியம் சேர்த்ததாக சொல்லப்படுவது மதவாத கண்ணோட்டமாகும்.