யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இவ்வீடியோ 2020-ம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், அந்நாட்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதியில் இக்கூட்டணி 230-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.
மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பாபா ஆதவ்வுடன் சரத் பவார் ... pic.twitter.com/bLiUZmXiIB
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபா ஆதவ்(90) புலே வாடா பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று திமுக-வினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய இதே வீடியோ 2020, அக்டோபர் மாதம் கேட்டலோனியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Alfons Lopez Tena (@alfonslopeztena) என்பவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடந்த போராட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pro-democracy demonstration in Bangkok, Thailandpic.twitter.com/4cDlTUucHH
தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு கலகம் மூலம் பிரயூத் சன் ஓச்சா ஆட்சியைப் பிடித்து பிரதமரானார். பிறகு நடந்த தேர்தலில் இவரது கட்சி முறைகேடு செய்து ஆட்சியில் நீடிப்பதாக ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் பிரயூத் சன் ஓச்சா பதவி விலக வேண்டுமெனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அந்நாட்டுக் காவல் துறை போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கிய நகரங்களில் நான்கு பேருக்கு மேல் கூட தடை விதித்ததும் அதில் ஒன்று. அதையும் மீறி மக்கள் ஒன்று கூடிப் போராடியுள்ளனர். இது தொடர்பான செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இப்போராட்டம் பற்றி ’பிபிசி’ தளத்தில் வெளியான செய்தியில் போராட்டக்காரர்கள் டார்ச் லைட் அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படம் பாங்காக் ’Ratchaprasong’ என்ற பகுதியில் எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

அப்பகுதியில் போர் நினைவுச்சின்னம் உள்ளது. இதனைப் பரவக் கூடிய வீடியோவிலும் (0:12) காண முடிகிறது. அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மேலே செல்லும் மெட்ரோ ரயிலிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் பாபா ஆதவ் போராட்டத்துடன் தொடர்புப்படுத்திப் பரப்புகின்றனர்.
முடிவு:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராகப் பாபா ஆதவின் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இவ்வீடியோ 2020-ம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், அந்நாட்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
