யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
5000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்று சொல்லி காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, மேடையில் வந்து 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா உண்மையைத் திரித்து பேசுகிறார்.
பரவிய செய்தி
“சென்னையிலிருந்து வேலூர் வரை 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தார்கள். ஆனால் விஜய்யைக் காண சாலைகளில் இரண்டு லட்சம் பேர் திரண்டிருந்தனர்” - ஆதவ் அர்ஜுனா.
விரிவான விளக்கம்
இந்தாண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகின்றன. பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தவெகவின் நிர்வாகிகள் கூட்டங்களில் 5000 பேருக்கும் குறைவாகவே கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு கட்டுபாடு விதிக்கிறது. ஆனாலும் விஜய்யை காண்பதற்காக சாலைகளில் 2 லட்சம் பேர் திரண்டிருந்தனர்” என்று கூறினார்.
உண்மை என்ன?
இது குறித்து தேடியபோது, 13/02/2026 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக அனுமதி வேண்டிய தவெக கட்சி சார்பில் காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தைக் காணமுடிந்தது.
அதில், ’இந்த நிகழ்ச்சியில் தவெகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் என 4998 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள்; அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிப்போம்’ என்று கூறி அனுமதி கேட்டுள்ளார்கள்.

ஏனெனில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், மாநாடுகள், ரோடு ஷோக்கள் ஆகியவற்றுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து அதன் வரைவு அறிக்கையை கடந்த 2025 நவம்பர் 21 அன்று உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தது.

அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால், கூட்டதால் பொது சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்தை சரி செய்ய காப்புத் தொகை நிர்ணயம் செய்யும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி 5000 முதல் 10,000 பேர் கூடும் கூட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் காப்புத் தொகை கட்டவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதேபோன்று குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கூட்டத்தினரை முறைபடுத்துதல், அதற்கு போதுமான தன்னார்வலர்களை வைத்திருப்பது உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு நிபந்தனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகள் எல்லாம் 5000 பேருக்கு அதிகமாக கூடும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கலாச்சார / மத வழிபாடு நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இத்தகைய நிபந்தனைகளிலிருந்து விலக்கு பெறவே, தவெக இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 4998 பேர் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்டதை புரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
5000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்று சொல்லி அனுமதி வாங்கிவிட்டு, மேடையில் வந்து 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா உண்மையைத் திரித்து பேசுகிறார்.