யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
SSA, RMSA இரண்டுமே Centrally Sponsored Scehems. சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தைப் பொறுத்தவரை 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொண்டிருந்தன.RMSA நிதி என்பது 12வது ஐந்தாண்டு திட்டத்திற்குப் பிறகு ஒன்றிய அரசு 50%, மாநில அரசு 50% என்பதாகவே இருந்தது. 2018 ஆம் ஆண்டு இந்த இரண்டு திட்டங்களும் சமக்ரா சிக்ஷா அபியான் என்ற பெயரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
ஆக,. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் மத்திய அரசு நிதியில் தான் கட்டப்படுகிறதா?
அடப்பாவிங்களா,...
அப்போ மாநில அரசு கல்விக்காக செய்யும் செலவு என்ன?

விரிவான விளக்கம்
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசிய அஸ்வத்தாமன், தமிழ்நாட்டில் 5ஆம் வகுப்பு வரை இருக்கின்ற அரசு பள்ளி கட்டங்களுக்கு SSA என்கிற ஒன்றிய அரசு நிதியில் கட்டப்படுவதாகவும், 10 வகுப்பு வரை இருக்கின்ற அரசு பள்ளி கட்டடங்கள் RMSA என்கிற ஒன்றிய அரசு நிதியில் இருந்த கட்டப்படுவதாகவும், 11,12 வகுப்பு அரசு பள்ளி கட்டடங்கள் நபார்ட் வங்கி மூலமாக ஒன்றிய அரசு அளிக்கின்ற நிதி மூலமாக கட்டப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும் அவர் நாற்காலி, மேஜை, கணினி, கழிபறை என அனைத்திற்கு ஒன்றிய அரசு தான் நிதி கொடுப்பதாகவும், மாநில அரசு சம்பளம் மட்டுமே தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆக,. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் மத்திய அரசு நிதியில் தான் கட்டப்படுகிறதா?🤔
அடப்பாவிங்களா,...
அப்போ மாநில அரசு கல்விக்காக செய்யும் செலவு என்ன? pic.twitter.com/sChG8J6iXr
உண்மை என்ன?
முதலில் தமிழ்நாட்டில் 5ஆம் வகுப்பு வரை இருக்கின்ற அரசு பள்ளி கட்டங்களுக்கு SSA( Sarva Shiksha Abhiyan ) என்கிற ஒன்றிய அரசு நிதியில் கட்டப்படுவதாக அவர் தெரிவித்திருந்ததை தேடிப் பார்த்தோம். அப்போது ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், Sarva Shiksha Abhiyan நிதியுதவி முறை குறித்து டிசம்பர் 03,2015 அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தைப் பொறுத்தவரை 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து RMSA நிதி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Press Information Bureauவில் இருந்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஜனவரி 02, 2009 அன்று வெளியிட்ட அறிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் RMSA நிதி என்பது 12வது ஐந்தாண்டு திட்டத்திற்குப் பிறகு ஒன்றிய அரசு 50%, மாநில அரசு 50% என்பதாகவே இருந்தது.

மேலும் 2018 ஆம் ஆண்டு இந்த இரண்டு திட்டங்களும் சமக்ரா சிக்ஷா அபியான் என்ற பெயரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டது. இப்போது சமக்ரா சிக்ஷா அபியான் நிதி என்பது 60% ஒன்றிய அரசு, 40% மாநில அரசு என்பதாக உள்ளது. ஆனால் அந்த நிதியைத் தான் இப்போது புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று காரணம் காட்டி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தராமல் நிறுத்தி வைத்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு RTE நிதியை மட்டும் ஒன்றிய அரசு அனுப்பியது.
இதையடுத்து 11,12 வகுப்பு அரசு பள்ளி கட்டடங்கள் நபார்ட் வங்கி மூலமாக ஒன்றிய அரசு அளிக்கின்ற நிதியால் கட்டப்படுவதாக அவர் தெரிவித்திருந்தது குறித்து தேடிப் பார்த்தோம். மாநில திட்டத் துறைகாக நபார்ட் வங்கி வெளியிட்ட புத்தகத்தில், நபார்ட் வங்கி தருகிற கடன் என்பது ஏற்கனவே உள்ள பள்ளிக் கட்டிடங்களில் பெண்களுக்கான கழிவறை கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் கடனாக தரப்படும் அந்த பணத்தை தமிழ்நாடு அரசு திருப்பித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாற்காலி, மேஜை, கணினி, கழிபறை என அனைத்திற்கு ஒன்றிய அரசு தான் நிதி கொடுப்பதாகவும், மாநில அரசு சம்பளம் மட்டுமே தருவதாகவும் அஸ்வத்தாமன் குற்றம்சாட்டிருந்தார். இது குறித்து தேடிப் பார்த்த போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட 2025 - 2026க்கான கொள்கை குறிப்புகளை பார்க்கமுடிந்தது. அதில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8,370 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 கழிப்பறைகள், 752 மீட்டர் வளாகச் சுவர்கள், 5 ஆண்கள் விடுதிகள் மற்றும் 5 பெண்கள் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 4412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள் மற்றும் 2290 மீட்டர் வளாகச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் 38 மாதிரி பள்ளிகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் முழுக்க ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்படுவதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பொய்யை பரப்பி வருவது உறுதியானது.