யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கிறித்துவ மதப் பாதிரியார் ஜெகத் கஸ்பர் மதம் சார்ந்த கருத்துகளை பள்ளியில் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சில தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. புகைப்படத்தில் உள்ள sunbeam பள்ளியில் அவர் மதம் சார்ந்த கருத்துக்கள் எதுவும் பேசவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சில நாட்களுக்கு முன்னர் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசுவதாக கூறி ’மூட நம்பிக்கையை’ ஊக்குவிக்கும் விதமாக பேசி இருந்தார். குறிப்பாக, “இறைவன் கருணையானவர் என்றால் ஏன் அனைவரையும் ஒன்று போல படைக்கவில்லை? கண் இல்லாமல், வீடு இல்லாமல் பலர் இருக்கின்றார்கள். முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இப்போது ஏழைகளாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்” எனப் பேசி இருந்தார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு இந்துத்துவவாதிகள் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் பாதிரியார் ஜெகத் கஸ்பர் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ”மரித்த ஒருவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தார் என மக்கள் மத்தியில் பிரசங்கம் செய்து வரும் பாதிரியார் ஜெகத்கஸ்பர் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது பிற்போக்குத்தனம் இல்லையா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் 'Fr.Jegath Gasper-"Sky is Not the Limit-Students Motivation Session || Part-2’ என்றிருந்ததை கவனிக்க முடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில், ’Sunbeam Matric & CBSE Schools’ என்ற யூடியூப் பக்கத்தில் 11 ஜூலை, 2018 அன்று வீடியோ ஒன்று பதிவு செய்திருப்பதை காண முடிந்தது.
வேலூரில் உள்ள Sunbeam Matric & CBSE பள்ளியில் 2018ம் ஆண்டு நடந்த ‘வானம் எல்லை இல்லை’ என்ற நிகழ்ச்சி ஜெகத் கஸ்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த வீடியோ அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இரண்டு பகுதியாக பதிவிடப்பட்டுள்ளது.
அதில் மாணவர்களுக்கு தன்னமிக்கை மற்றும் கல்வி சார்ந்த அறிவுரைகளை கூறுகிறார். அதுமட்டுமின்றி தமிழ் மொழியின் சிறப்பு, சுற்றுச்சூழல் மாசு, மணல் கொள்ளை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற கருத்துக்களைத்தான் பேசியுள்ளார். எந்த ஒரு இடத்திலும் மூடநம்பிக்கையை வலியுறுத்தும் விதமாகவோ ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ அவர் பேசவில்லை.
ஜெகத் கஸ்பர் கிறிஸ்தவ மத பாதிரியராக இருந்தாலும் அவர் மாணவர்கள் மத்தியில் தான் பின்பற்றும் மதத்தை வலியுறுத்தும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. ஆனால், மகாவிஷ்ணுவோ முன்பிறவி பாவ புண்ணியமே மாற்றுத்திறனாளியாக பிறக்க காரணம் என்கிற வகையில் பேசி இருந்தார். இவை இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. இவற்றையெல்லாம் விட அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் எனவே அவரை பள்ளியில் பேச வைக்க கூடாது என்பது முழுக்க முழுக்க மத வெறுப்பு மட்டுமே.
முடிவு:
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் sunbeam பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசியதில் மதம் சார்ந்த எந்த கருத்தும் இல்லை. மகாவிஷ்ணு-வின் கைதை தொடர்ந்து மத பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
